Wednesday, February 28, 2007

நம்பிக்கை போட்டி முடிவுகள்

நம்பிக்கை போட்டி முடிவுகள்

அன்பு இணைய நெஞ்சங்களே!

அனைவருக்கும் நம்பிக்கையின் நெஞ்சார்ந்த வணக்கங்கள்!

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழாவினை முன்னிட்டு நடத்திய காதல் கவிதைகள்(ஏன் நடத்தப்பட்டது என்ற விபரத்தை அனைவரும் அறிவீர்கள்) போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டது.

ஆரம்பத்தில் சில நாட்கள் விறுவிறுப்பு குன்றிய நிலையில் இருந்த போட்டி பின் விறு விறுப்பு கூடி கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட கவிதைகள் போட்டிக் களத்தில் இறங்கியது.

சிலரது படைப்புகள் விதிமுறைக்கு மாறாக இருந்தமையால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டதில் எங்களுக்கும் வருத்தமே! அடுத்த முறை விதிமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் தங்கள் படைப்பை தர வேண்டும் என்று அன்புடன் இந்நேரம் வேண்டிக் கொள்கிறோம்.

கவிதைகள் குறித்து படைப்பாளிகளும் நடுவர்களும் போட்டி முடிவு தங்கள் கணிப்பு படி சரியாக வந்திருக்கிறதா என்ற ஆர்வத்துடன் நிச்சயமாக இருப்பார்கள்!

ஒருவர் அல்லது இருவர் மதிப்பீடு செய்தால் சரியாக சில சமயம் வரும்! ஆனால் 11 பேர் ஒரே படைப்பை இவர் இன்னார் என்று அறியாமல் மதிப்பீடு செய்தால் அது சரியாகத்தான் வரும். அதுவும் ஆண்கள் எழுதிய காதல் கவிதை பெண்கள் மதிப்பீடு செய்தது பெரும் சிறப்பு.

ஆகவே அறிவிக்கப்படும் முடிவுகள் மிகச் சரியானவையாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

இந்த முடிவுகளை மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்க உள்ளோம்.

மிகுந்த பணிச்சுமையில் அடியேன் இருக்கின்றேன். எனவே என்னால் ஏற்பட்ட தாமத்தை பொறுத்தருளும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் போட்டியில் பங்கு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், நம்பிக்கையின் மீது மிக்க ஆர்வம் கொண்டு பொருளுதவி செய்த அன்பர்களுக்கும் , விளம்பர உதவி செய்த அன்பர்களுக்கும், முத்தமிழ் மற்றும் இல்லம் குழும நண்பர்களுக்கும், முக்கியமாக கவிதைகளையெல்லாம் மிக்க பொறுமையுடன் மதிப்பீடு செய்த நடுவர்களுக்கும் எத்தனை நன்றிகள் நான் உரைத்தாலும் அவை கணக்கிலாகாது. ஆக அனைவரையும் அடிபணிந்து வணங்கி போட்டி முடிவுகளை அறிவிக்கும் வரை பொறுத்தருள வேண்டுகிறேன்.

நன்றி!

நன்றி!

நம்பிக்கை குழுமம் சார்பாக

பாஸிட்டிவ் ராமா

Labels:

Sunday, February 18, 2007

நம்பிக்கை கவிதைப் போட்டி - இன்றே கடைசி நாள்

Labels:

Saturday, February 17, 2007

நம்பிக்கையின் கவிதைப் போட்டி - நாளை கடைசி நாள்

Labels:

Monday, February 12, 2007

மாமனிதர் சாகரனும் நானும்

(என்னுயிர் தோழனுக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்)


நேற்றிரவு தூங்கிக் கொண்டிருக்கும் போது மொபைல் போன் அடித்தது, சில நேரம் அதை கண்டுக்காமல் விட்டு விடுவேன், ஆனால் ரிங் டோன் அடித்து அடித்து கட் ஆன விதம் எனக்கு ஏதோ போல் இருந்தது.

போனில் தொடர்பு கொண்டவர் முத்தமிழ் மன்ற குமரன், “அண்ணா! ஒரு அதிர்ச்சி செய்தி, தமிழ்மணத்தில் நம்ம சாகரன் அண்ணா பற்றிய கெட்ட செய்தி, அவர் மறைவு என்று பதிவு இருக்குது, நம்ம கிரியும் அதை பார்த்து உடனே உங்களிடம் உடனே சொல்லச் சொன்னார்” என்றார்.

அந்த ஒரு நொடியில் என் மூச்சே நின்று போனது, கடவுளே! இது பொய்ச்செய்தியாக இருக்கட்டும், ஏதோ தவறான தகவலாக இருக்கட்டும் என்று இணையத்தில் தமிழ்மணம் பார்த்தேன், பதிவை போட்டவர்கள் மதியும், சிபியும், இருவரும் எதையும் ஆராயாமல் போடுபவர்கள் அல்ல, இருந்தாலும் மனதுக்குள் ஒரு எண்ணம், இது தவறாக தகவல் தான் என்று நினைத்து, சாகரனின் சவுதி அரேபியா தொலைபேசிகளுக்கு அழைத்தேன், ஆனால் போகவில்லை. ஒரே படபடப்பு, என்ன செய்வது என்று தெரியவில்லை, கண்களில் நீர் வழிகிறது, இருந்தாலும் இறைவா! நீ நினைத்தால் எதையும் எப்போவும் மாற்ற முடியும், இச்செய்தி பொய்யான செய்தியாக இருக்கட்டும் என்று வேண்டினேன்.

பின்னர் முன்பு சாகரன் கொடுத்த ரியாத் தமிழ்ச்சங்கம் வலைத்தளம் போய் பார்த்தேன், அது பல மாதங்களாக மாற்றப்பட வில்லை, யாருடைய தொலைபேசியாவது கிடைக்குமான்னு பார்த்தேன், கிடைக்கவில்லை.

பின்னர் யாகூ குருப் போனால், அங்கே இம்தியாஸ் என்பவர் போட்ட பதிவை படித்து மனம் உடைந்து போனேன்.

உடனே கிரிக்கு சொன்னேன், கத்தார் இக்பால் அண்ணாவுக்கு தொடர்பு கொண்டேன், அவரும் தூங்கிவிட்டார் போல், லைன் எடுக்கலை. என்ன செய்வது என்று புரியவில்லை. கிரியும் ரொம்ப நேரம் பேசி, மீண்டும் தமிழ்மணம் பார்த்தேன், ஒவ்வொருவராக உறுதி செய்வது போல் பதிவுகள் வர, உடனே கிரியிடம் சொல்லி, முத்தமிழ் மன்றத்தில் அறிவிப்பு கொடுக்கச் சொன்னேன், இரவு முழுவதும் தூக்கமில்லை, படுத்தால் மனப்பாரம் அதிகமாகிக் கொண்டே இருக்க, விடியற்காலை வரை விழித்திருந்தேன்.

தொடர்ந்து அவரைப் பற்றி நினைக்க நினைக்க மனம் பாரமாகிறது, கண்களில் நீர் வழிகிறது. எத்தனை அருமையான மனிதர், எங்கே தேடினும் அவரைப் போல் ஒருவர் இனி கிடைக்க மாட்டார்.

நானும் சாகரனும் பழகிய நாட்கள் இனிமையான நாட்கள், அந்த இனிமையான நாட்களை பகிர்ந்து கொண்டால் தான் என் மனப்பாரம் குறையும்.

சாகரன் என்ற கல்யாண் எனக்கு தமிழ்மன்றத்தில் தான் பழக்கம் ஆனார். நான் அங்கே குழந்தைகளுக்கு கதை சொல்வது பரஞ்சோதி மாமா என்ற தலைப்பு தொடங்கிய போது, மன்ற உறுப்பினர்களின் குழந்தைகளின் பெயர்களை கேட்டு, அவர்கள் அக்கதைகளில் வரும்படியாக செய்தேன், அப்போ தான் எனக்கு வர்ணிகா பழக்கம் ஆனார், சாகரன் மற்றும் சகோதரி எங்க உறவானார்கள்.

வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு என்ற தலைப்பு தொடங்கிய போது சாகரன் சவுதி அரேபியா செய்திகள் அதிகம் கொடுத்தார். சாகரன் என்ற பெயர் ஏன் என்று கேட்டதற்கு சாகரம் போல் எல்லை இல்லாமல் பரந்து விரிய வேண்டும், அழிவு என்பதே இல்லாததாக இருக்கவேண்டும் என்றார்.

கால இயந்திரம் என்ற டைம் மெஷின் பற்றிய கதை எழுதிய போது அதில் அவர் பொன்னியின் செல்வனில் வரும் வந்தியதேவன் பாத்திரமாக வர ஆசைப்பட்டார், அதை வைத்து கதை எழுதவும் என்னிடம் சொன்னார். அவர் வந்திய தேவனாக மாறி வீர நாராயண ஏரி ஓரமாக குதிரையில் போகும் காட்சியை ரசனையாக சொன்னார்.

பின்னர் அடிக்கடி தொலைபேசியில் அழைப்பார், அப்போ என் மகள் சக்தி பிறக்கவில்லை, வர்ணிகாவை பற்றி அடிக்கடி சொல்வார், கை சூப்பும் பழக்கம் பற்றி சொல்வார், மகளின் ஒவ்வொரு செயலையும் என்னிடம் சொல்லி மகிழ்வார், நானும் அவருக்கு குழந்தை வளர்ப்பு விசயமாக தகவல்கள் கொடுப்பேன். “சுரேஷ்! உங்ககிட்ட நிறைய பேச ஆசையாக இருக்குது, ஆனால் தொலைபேசி கட்டணம் தான் தடுக்குது, நேரில் சந்தித்து இது பற்றி அதிகம் பேசுவோம்” என்று அடிக்கடி சொல்வார்.

சகோதரியும் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், என் மனைவியோடும் பேசியிருக்காங்க. வர்ணிகா பேசுவதை கணினி வாயிலாக எனக்கு அனுப்பி வைப்பார், நானும் சாட் செய்யும் போது பேசியிருக்கிறேன்.

முத்தமிழ் மன்றம் தொடங்க நினைத்த கணமே தன் முழு ஆதரவையும் கொடுப்பதாக உறுதி கூறினார், அதற்காக தினமும் போன் செய்து பேசினார், இரண்டே நாட்களில் முத்தமிழ் மன்றம் அவருடைய அயராத உழைப்பில் உருவானது. முத்தமிழ் மன்றம் தொடங்கும் முன்பு அவரது பாலகுமாரன் விவாதக்களம் தொடங்கிய போதும் என்னை வழிநடத்துநராக இருக்க சொன்னார், நான் அதில் இருந்த குறைகளை சுட்டிக் காட்டி அதை எல்லாம் சரி செய்தார். பின்னர் பாலகுமாரன் நாவல்கள் அதிகம் படிக்காததால் என்னால் அங்கே தொடர்ந்து பதிவுகள் போட முடியவில்லை, அப்போவும் “சுரேஷ், சும்மாவாக்கும் எட்டி பாருங்க, நான் விரைவில் பாலகுமாரன் நாவல்கள் இணையம் வழியாக அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்பார்.

முத்தமிழ் மன்றம் தொடங்கிய காலக்கட்டத்தில் அவருடான நட்பு மேலும் கூடியது. வர்ணிகாவுக்காக நான் கார்ட்டூன், கணினி விளையாட்டு, பாடங்கள் அடங்கிய சிடிகளை அனுப்பி வைத்து மகிழ வைத்தேன், இன்னும் இருப்பதை நேரில் பார்க்கும் போது கொடுக்கிறேன் என்று சொல்லி வந்தேன்.

நிலா சகோதரி நடத்திய குழந்தைகளுக்கான போட்டிகளில் பரிசு வழங்க ஒத்துக் கொண்ட போது, பணம் எப்படி அனுப்புவது என்று தெரியாமல் விழித்த போது, கை கொடுத்தவர் சாகரன் தான், நான் இன்னும் அவருக்கு கடனாளியாகவே இருக்கிறேன், எத்தனையோ முறை கொடுக்க முனைந்த போதும், “சுரேஷ் நேரில் சந்திக்கும் போது கொடுங்க, ஒன்றும் அவசரம் இல்லை, இந்த ஆண்டு எப்படியும் நாம் சென்னையில் சந்திக்கலாம்” என்றார்.

அய்யோ கடவுளே! ஏன் இப்படி சதி செய்தாய், அவர் என்ன பாவம் செய்தார்.

அவருடன் பேசும் போதெல்லாம் ஏதோ ஒரு மகானிடம் பேசுவது போலிருக்கும், அநாவசியமான சொற்கள், செயல்கள் எதையும் அவரிடமிருந்து வராது, எப்போ பார்த்தாலும் “எதையாவது சாதிக்கணும் சுரேஷ், அதுவும் பெரிய அளவில் இருக்கணும், இப்போ நம் முகம் காட்டக்கூடாது, யார் அது யார் அது என்று தேடும் நிலையில் நாம் முகம் காட்டணும்” என்று குழந்தை போல் சொல்வார், பேச்சில் அத்தனை ஆர்வமும், உண்மையும் இருக்கும்.

“இன்று எல்லோரும் யார் சாகரன், யார் கல்யாண், எப்படி இருப்பார் என்று கேட்கிறார்கள் நண்பா! உன் முகத்தை காட்டு நண்பா”

சென்னை வலைப்பதிவாளர்கள் கூட்டத்தில் தன்னை அறிமுகப்படுத்தியதை கூட அவர் சொன்னார், அது ரொம்பவும் எதார்ச்சையாக நடந்ததாகவும், ரொம்பவும் எளிமையாக தன்னை அறிமுகப்படுத்தியதாக சொன்னார்.

தேன் கூடு தொடங்கிய போது, தனியொருவராக அதற்காக இரவு பகலாக கடுமையாக உழைத்தார், இது யாருக்கும் போட்டியாக இருக்காது, தனித்தன்மையோடு விளங்கும் என்று அடிக்கடி சொல்வார்.

அவரது மற்றும் என்னுடைய நீண்ட நாள் கனவாக குழந்தைகள் தளம், ஆம் தமிழிலில் குழந்தைகளுக்கான அனைத்து விசயங்களையும் ஒரே இடத்தில் கிடைக்கும் தளம் ஒன்றை அமைக்க நாங்க இருவரும் திட்டமிட்டோம். நான் அவரை தொடர்ந்து அதற்காக உழைக்குமாறு கேட்டுக் கொண்டேன், வாண்டு.காம் என்ற பெயரையும் அவர் ரிஜிஸ்டர் செய்து வைத்தார்.

சென்னை சென்ற போது நண்பர்களிடம் அது பற்றி பேசியும் இருந்தேன், ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து வேலைகள் அதிகமாகவும், சாகரனும் தேன் கூடு மற்றும் அலுவலக பணியில் மும்மரமாக இறங்க, இருவரும் அதை வரும் தமிழ் புத்தாண்டுக்கு தள்ளிப் போட்டோம். வாண்டு.காம் தளத்திற்காக நிறைய மென் பொருட்களையும், பிளாஷ் விளையாடுகளையும் வாங்கி வருவதாக சொன்னார்.

நான் கடைசியாக அவரிடம் பேசியது 6ந்தேதி, அன்று அவரிடம் நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு கவிதைப் போட்டியின் விபரத்தை தேன் கூட்டின் முகப்பில் தெரியப்படுத்துங்க என்றேன், அவரும் உடனே செய்கிறேன் என்றார்.

அடுத்த நாள் பார்த்தவுடன் அவருக்கு நன்றி சொல்ல நினைத்தேன், பின்னர் அப்படியே தள்ளி போய் விட்டது, அவரும் என்னை, நம்மை எல்லாம் பிரிந்து ரொம்ப தூரம், இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்.

இனிமேல் எனக்கு சாகரன் போல் ஒரு முகம் தெரியாத நண்பர் கிடைப்பாரா என்று தெரியவில்லை. சகோதரியும் மருமகள் வர்ணிகாவையும் எப்படி காண்பேன், நேரில் பார்க்கும் போது எப்படி ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை.

காலதேவனின் கொடிய செயலால் என் நண்பனை இழந்துவிட்டேன். சாகரன் ஒரு மகான், வாழும் விவேகானந்தராக அவரை கண்டேன். பாரதி, கணித மேதை இராமானுஜம், மாவீரன் பகத்சிங் போன்றவர்களை எல்லாம் இளம் வயதில் தன்னிடம் அழைத்துக் கொண்ட இறைவன், என் நண்பரையும் அழைத்துக் கொண்டது இறைவனின் சுயநலமிக்க கொடிய செயலாகவே நான் கருதுகிறேன்.

தமிழ் இணையத்தில் தனக்கு என்று ஒரு மகத்தான இடத்தை அடைய நினைத்த என் தோழனின் பயணம் கால்வாசி தூரம் கூட இல்லை என்றாலும், நம் அனைவரின் மனதிலும், தமிழ் தாயின் இதயத்திலும் என்றும் நீங்காத அளவுக்கு சாதித்து சென்றிருக்கிறார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

Labels:

Friday, February 09, 2007

நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101 - உன்னிலும் என்னிலும்

நம்பிக்கையின் இரண்டாம் ஆண்டு விழா கவிதைப் போட்டியில் பங்கேற்க வந்திருக்கும் கவிதைகள் இங்கே கொடுக்கப்படும்.


நம்பிக்கையின் கவிதைப் போட்டி 101

உன்னிலும் என்னிலும்

உன் சிறுவயது மிட்டாய் கலர் பாவாடை சட்டை,
என் முதல் பச்சைக்கலர் பேண்ட் ...

உனது அறுவை சினேகிதி
எனது புருடா நண்பன்....

உனக்கு பிடித்த ஆப்பிள் ஜுஸ்
எனக்கு பிடித்த வோட்கா..

உன் உளம் கவர்ந்த நாவலாசிரியர்
என் ஆசை கால் பந்து வீரன்...

உன் முதுகு மச்சம்
என் மார்புக்கீறல்..

உன் தாலிக்கொடியின் அழுத்தம்
என் மீசையின் குத்தல்

என இன்னும் ஆழமாய்
எல்லாம் பகிர்ந்து கொண்டாலும்...

உன்னிலும் என்னிலும்
சில சொல்லாமல் இருக்கத்தான் செய்கிறது
இன்னமும்...

உதாரணமாய் என் முதல் காதல்....
உன்னில் ..?

(நண்பர்களே! உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்).

Labels:

Tuesday, February 06, 2007

நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி

நண்பர்களே!

போட்டியின் விபரமும், விதிமுறைகளும் முந்தைய பதிவில் காணப்படுகிறது.

உங்கள் படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1. பாஸிடிவ்ராமா - positiverama@gmail.com

2. பரஞ்சோதி - paransothi@gmail.com

3. விழியன் - umanaths@gmail.com


மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

நன்றி!

இவண்,

நம்பிக்கை கூகுள் குழுமம்.

http://groups.google.co.in/group/nambikkai

Labels:

Monday, February 05, 2007

நம்பிக்கை இரண்டாம் ஆண்டு விழா - கவிதைப் போட்டி

இணையத்தின் இனிய நண்பர்களே!

வணக்கம்!

உங்கள் நம்பிக்கையினால் அன்பினால் பிறந்த இந்த "நம்பிக்கை" குழந்தை தனது இரண்டாம் அகவையினை ஏப்ரல் 23, 2007 - ல் கொண்டாடுகிறது.

நம்பிக்கை குழுமத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை தன் சகோதர குழுமத்தின் கொண்டாட்டத்துடன் சேர்ந்து கொண்டாட முடிவு செய்து சிறப்பான போட்டி ஒன்றை நடத்த உள்ளது.

சென்ற வருடம் நடத்திய கவிதை./ கட்டுரை/கதை போட்டிகளில் பலர் சிறப்பாக பங்கெடுத்து சிறந்த பரிசுகளை அள்ளிச் சென்றார்கள். அவர்களுக்கும் , பரிசுகளை வழங்கிய நண்பர்களுக்கும் மீண்டும் பாராட்டுக்கள்.

இந்த ஆண்டிற்கான போட்டி சற்றே வித்தியாசமானது. கவிதைப் போட்டி மட்டும் நடத்த உள்ளோம்.. தலைப்பு காதல் பற்றியது ..என்னடா இது நம்பிக்கையில் காதல் கவிதையா? ஆ! என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. தலைவன் தன் தலைவிமீது பாடும் காதலாய் கவிதை இருத்தல் வேண்டும்.

சின்ன விளக்கம் இங்கே..

காதல் கவிதைகள் நம்பிக்கையில் வேண்டாம் என்று நான் கருதியதற்கு காரணத்தை முதலில் பணிவுடன் சொல்கிறேன். சில கவிதைகள் குழுவில் உள்ளவர்களுக்கு பெரிய நெளிசலை ஏற்படுத்தும் அளவிற்கு இருந்தது. அந்த கவிதைகளை மாத்திரம் தடுக்கும் போது அந்த படைப்பாளிகளுக்கு வருத்தம் ஏற்படும். என்ன செய்வதென்று புரியாமல் தற்சமயம் அனைத்து கவிதைகளையும் கொஞ்சகாலம் நிறுத்தி வைப்போம் என முடிவெடுத்து தெரிவித்தேன். ஏனெனில், குழுவில் பண்புசால் பெரியோர்களும், ஆன்மீகவாதிகளும், எல்லா வயதிலும் பெண்மணிகளும் இருக்கின்றனர் அல்லவா! குழுவில் இருக்கும் அன்பர்களது புதல்வரும்,புதல்வியரும் கூட இதில் வரும் மடல்களை படிப்பது உண்டு. எனவேதான் வேறு வழியில்லாமல் அந்த முடிவைத் தெரிவித்தேன்.

ஆனாலும் பல இளைஞர்கள், பல கவிஞர்கள் நிரம்பிய இந்த குழுவில் "காதல்" என்னும் கருப்பொருளை தடை செய்ய வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. அதில் எனக்கு ஈடுபாடு இல்லாவில்லாவிட்டாலும் அதில் வெறுப்பு இல்லை. படைப்பாளிகளுக்கு 'காதல்' என்பது ஒரு முக்கிய கருவாகதான் விளங்கி வருகிறது...இன்று வரை.

சரி. விஷயத்திற்கு வருகிறேன். ஆண் கவிஞர்களுக்கு மாத்திரமேயான இந்தக் "காதல் கவிதை போட்டியில்" என்ன விசேசம் என்றால், உங்கள் கவிதை எந்த அளவிற்கு எல்லை மீறாமல் அதே சமயம் அற்புதமாக இருக்கிறது என்பதை தீர்மானிக்க போவது பெண் நடுவர்கள். 24 வயதிலிருந்து 70 வயது வரையிலான பெண் நடுவர்கள் இதை தேர்ந்தெடுக்க போகின்றனர்.

உங்களுடைய கவிதை பற்றிய உண்மையான விமரிசனம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு.

நடுவர்களின் பெயர்கள் அவர்கள் அனுமதியின் பேரில் போட்டி முடிவோடு வெளியிடப்படும்.

படைப்புகள் உங்கள் பெயரில்லாமல் நடுவர்களுக்கு அனுப்பப்படும்.

பரிசுத்தொகை விபரம்

முதல்பரிசு ரூ 1500/-

இரண்டாம் ரூ 1000/-

மூன்றாம் பரிசு ரூ 500/-

ஆறுதல் பரிசு ரூ 100/- தலா 10 பேருக்கு.


போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி/ விதிமுறைகள்:

1. ஆண் படைப்பாளார்கள் மட்டுமே பங்கு கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்பவர் நம்பிக்கை உறுப்பினராகத்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. பெண் படைப்பாளர்கள் நடுவர் குழுவில் சேர விருப்பம் தெரிவித்தால் எங்களுக்கு மடலிடுக .. பெரிதும் வரவேற்கிறோம்.

2. படைப்பாளர்கள் தங்கள் முகவரியையும் தொலைபேசி/அலைபேசி எண்ணையும் தரவேண்டும். அவை பொதுவில் வெளியிடப்பட மாட்டாது என்று உறுதி சொல்லுகின்றோம்.

3. குறைந்த வார்த்தைகளுக்குள் சிறப்பாக கருத்தை 'பளிச்'சென்று சொல்லும் கவிதை சிறந்ததாகக் கருதப்படும்.

4. பண்பாட்டின் எல்லையை மீறாத கவிதை பெரிதும் வரவேற்கப்படும். (இதுதான் மிக முக்கியம்)

5. ஏற்கனவே இணையத்திலோ மற்ற ஊடகங்களிலோ வெளி வந்த படைப்பாய் இருத்தல் கூடாது!

6. ஒருவரே அதிகபட்சம் 3 படைப்புகளை அனுப்பலாம்.

7. யுனித்தமிழில் படைப்பை அனுப்பினால் மிக்க மகிழ்ச்சி!

படைப்பை அனுப்ப கடைசி நாள்: 14 - 02 - 2007 (புதன்) இந்திய நேரம் காலை 10.00 மணிக்குள்.

உங்கள் படைப்புகள் தேர்வு குழுவுக்கு அனுப்பப்பட்டு தேர்ந்தெடுக்கப் படும். பெயரை மறைத்து கட்டுரை குழுமத்தில் பிரசுரமாகும்.

பிறரின் விமர்சனங்களும் கவிதையைத் தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய அடிப்படையாகக் கொள்ளப்படும்.தங்களது கவிதையைப் பற்றி உண்மையாகத் தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

அனுப்பப்படும் கவிதைகள் நம்பிக்கை குழுமத்திலோ, நம்பிக்கை வலைப்பூவிலோ பிரசுரிக்க உங்கள் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதையை வேறு எங்கு வேண்டுமானாலும் பிரசுரம் பண்ணலாம்.

தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் பற்றிய விபரம் பிப்ரவரி இறுதியில் அறிவிக்கப்படும். நடுவர் குழுவின் முடிவே இறுதி முடிவாகும் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

படைப்பை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

1.பாஸிடிவ்ராமா positiverama@gmail.com

2.பரஞ்சோதி umanaths@gmail.com

மேலதிக விளக்கம் வேண்டுமெனில் எங்களைத் தொடர்பு கொள்க!

உலகத் தமிழர்களே ! ஒன்று கூடுங்கள் நம்மவர் மனதில் நம்பிக்கையை விதையுங்கள்! அனைவரும் போட்டியில் பங்கு பெற ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

நன்றி!

இவண்,

நம்பிக்கை கூகுள் குழுமம்.

http://groups.google.co.in/group/nambikkai

Labels: