Sunday, October 16, 2005

என் நினைவலைகள் – கிரிக்கெட் (4)

என்னுடைய அம்மாவுக்கு இனிமேல் நான் சத்தியமாக கிரிக்கெட் விளையாட போகமாட்டேன் என்று சத்தியம் செய்த நேரத்தில் என்னால் மற்ற விளையாட்டுகளில் கவனம் செலுத்த முடிந்தது, அதனால் 100, 200மீட்டர் ஓட்டம், நீளம், மும்முறை தாண்டுதலில் மாவட்ட அளவில் பரிசுகள் வாங்க முடிந்தது (இது தனிக்கதை). நிறைய புத்தகங்கள் படிப்பது, விவசாயம், தேனீ வளர்ப்பது, காட்டில் வேட்டையாடுவது போன்றவற்றில் என் கவனம் சென்றது.

எத்தனையோ முக்கியப் போட்டிகள் இருந்தாலும் நான் செல்லவில்லை. அதே நேரம் எங்க ஊரில் இரண்டாம் ஆண்டாக கிரிக்கெட் போட்டிகளை நடத்த முடிவு செய்து, திருநெல்வேலி அணியிடம் இருந்த சுழல் கோப்பையை வாங்கி வந்து, பணம் வசூல் செய்து, இந்த முறை எங்க ஊர் அணியை இரண்டாக பிரித்து, ஒரு அணிக்கு பாஸ்கர் அண்ணா தலைமையும், அடுத்த அணிக்கு மெல்கி தலைமையும் தாங்கினார்கள். பாஸ்கர் அண்ணா அணியில் எல்லாமே நல்ல வீரர்கள், அது மட்டுமல்லாது பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களையும் சேர்த்து பலமான அணியாக்கி விட்டார்கள். அடுத்த அணியில் வழக்கம் போல் மெல்கி, மனோகர், சார்லஸ், பாக்கியம், ஆசிர்வாதம், குருஸ் என்று சொத்தை அணியை தேர்வு செய்து விட்டார்கள். என்னை அழைத்தும் நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன்.

முதல் போட்டியிலேயே எங்க சீனியர் அணி எதிர்பாராத விதத்தில் தோற்று போக, அதிசயமாக எங்க ஜீனியர் அணி வெற்றிப் பெற, ஊரில் ஒரே குழப்பம். சீனியர் அணிக்கு சரியான திட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாட முடியாத அளவுக்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் கமெண்ட் அடித்தார்கள். இப்போ செமி பைனலில் எங்க ஜீனியர் அணி, வெற்றி பெற்றால் இரண்டாவது பரிசாவது கிடைக்கும், நான் விளையாடினால் வெற்றி நிச்சயம் என்று நம்பி, எங்க அம்மாவிடம் அனைத்து வீரர்கள், எங்க மாமா, சித்தப்பா எல்லாம் வந்து என்னை விளையாட அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். எங்க அம்மாவும் இத்தனை பேர் கேட்கிறார்களே என்று யோசித்து என் சத்தியத்தை பூஜை அறையில் வாபஸ் வாங்கி விட்டார்கள். அதன் பின்பு சத்தியம் சர்க்கரை பொங்கல் என்ற நிலையை நான் எடுத்துக் கொண்டேன்.

செமிபைனலில் உடன்குடி அணியை எதிர்த்து ஆட வேண்டும், அப்போ பார்த்து சென்னையில் இருந்து 2 பேர் எங்க ஊருக்கு விருந்தாளியாக வந்திருந்தார்கள், இருவரும் நல்ல ஆட்டக்காரர்கள் என்று சொல்லி இருவரையும் அணியில் சேர்த்தாச்சு.

முதலில் பேட் செய்த உடன்குடி அணி 25 ஓவரில் 9 விக்கெட்கள் இழந்து 165 ரன்கள் எடுத்தார்கள். சென்னை வீரர் ஒருவர் அருமையாக ஸ்பின் பந்து வீசி 4 விக்கெட்கள் மேல் எடுத்தார், அன்று தான் நாங்க இதுதாண்டா ஸ்பின் பவுலிங் என்று தெரிந்து கொண்டோம். என் பங்கிற்கு 3 விக்கெட்.

பேட்டிங் செய்த போதும் சென்னை வீரர்கள் அருமையாக ஆடி நல்ல துவக்கம் கொடுத்தார்கள், 70 ரன்கள் வரை விக்கெட் விழவே இல்லை, அதன் பின்பு விக்கெட் மழை பொழிய தொடங்கியது, வரிசையாக 5 விக்கெட்கள் காலி, பின்னர் கட்டை மன்னன் சார்லஸிம், கேப்டன் மெல்கியும் தாக்கு பிடித்து 110 ரன்கள் வரை கொண்டு வந்து விட்டார்கள், ஓவரும் 18 முடிந்து விட்டது. சார்லஸால் மெல்கி ரன் அவுட் ஆக, நான் இறங்கினேன். இன்னமும் 56 ரன்கள் தேவை, 7 ஓவர் தான் இருக்குது, பாஸ்கர் அண்ணா தான் போட்டிக்கு அம்பயர், அவர் நான் உள்ளே சென்றதும் தயவு செய்து சார்லஸ் பேட்டிங் செய்ய விடாதே, அவன் கட்டை போட்டு கவுத்துடுவான், ஓவருக்கு 8 ரன் தேவை, சார்லஸால் ஓடவும் முடியாத நிலை, எனவே ஓவருக்கு 2 பவுண்டரி அடிக்கப் பார், விக்கெட் கீப்பருக்கும் பின்னால் பந்தை தட்டி விடப்பார், 5 அல்லது 6வது பந்தில் ஒரு ரன் எடுத்து அடுத்த ஓவருக்கு நீயே விளையாடு என்றார்.

நான் எப்போவும் கால் / இடது பக்கம் ரொம்பவும் நன்றாக விளையாடுவேன் (நன்றி. கேப்டன் ரவிகுமார்), முதல் 2 ஓவரில் பயந்து பயந்து ஆடினேன், எனக்கு அப்புறம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஆட்டக்காரர்கள் கிடையாது, மேலும் சார்லஸ் கட்டை போடும் மன்னன், ஓடவும் முடியாத நிலை. 5, 6 ரன்கள் என்று தான் எடுக்க முடிந்தது. ரன் ரேட் எகிற, வெளியே வேடிக்கை பார்க்கும் ஓவ்வொருவரும் கத்தி கத்தி, ஒவ்வொன்றாக சொல்ல, அதில் ஒருத்தர், ஏலே, இவங்க மட்டும் அடிக்காம வரட்டும், வெட்டி புடுவேன்லே என்று மிரட்ட, ஒரே டென்சன். சார்லஸீக்கு ரன்னர் கேட்டால் உடன்குடி அணி அனுமதிக்கவில்லை.

அப்போ பார்த்து முதல் நிலை பந்து வீச்சாளர் ஒருவரை கொண்டு வர, அவர் என்னை பயமுறுத்த முதல் பந்தே பவுன்ஸர் போட்டார், எனக்கு நல்லா தெரியும், அம்பயர் பாஸ்கர் அண்ணா, கண்டிப்பாக நோ பால் கொடுப்பார், எனவே கண்ணை மூடிக் கொண்டு ஹீக் சாட் அடிக்க அது சிக்ஸர் பறந்தது, அதே போல் நோ பால் கொடுக்க, எதிரணிக்கு ஒரே டென்சன், அடுத்த பந்தை என் காலைப் பார்த்து வீச, நான் அதை லெக் சைடில் தட்டி விட அது பவுண்டரியாகி விட்டது. அதன் பின்பு அந்த பந்து வீச்சாளரை எதிரணி அசிங்க அசிங்கமாக திட்ட, அடுத்த பந்தில் நான் ஒரு ரன் எடுக்க, சார்லஸ் தன் வேலையை காட்ட, அது மட்டுமல்லாது கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்தான், அந்த ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது, அத்தோடு சார்லஸீக்கு பாஸ்கர் அண்ணா சரியான திட்டு கொடுத்தார். இப்போ 4 ஓவரில் 32 ரன்கள் தேவை. சார்லஸ் பேட்டிங், மீண்டும் சார்லஸ் பந்தை மட்டை வாங்காமல் விக்கெட் கீப்பரிடம் விட, டென்சன் ஆன பாஸ்கர் அண்ணா வைட் கொடுக்க, சண்டை ஆரம்பித்தது, அப்புறம் நாலாவது பந்தில் சார்லஸ் பவுண்டரி அடிக்க, அடுத்த பந்தில் ஒரு ரன், கடைசி பந்தில் நான் ஒரு ரன், மொத்தம் 7 ரன்கள் கிடைத்தது.

எல்லோருக்கும் டென்சன், 3 ஓவர் 25 ரன்கள். எனக்கு பந்து வீச யார் வருகிறார்கள் என்று ஒரே ஆர்வம், மீண்டும் அவர்கள் புதிய பந்து வீச்சாளரை கொண்டு வந்தார்கள், அந்த ஓவரில் 1 பவுண்டரி, ஒரு 2 ரன் ஒரு வைட், 1 ரன் எடுக்க முடிந்தது, 12 பந்தில் 17 ரன்கள் தேவை. கடைசி ஓவரில் மட்டும் 11 ரன்கள் தேவை. என் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி, முதல் பந்தில் 0, அடுத்த பந்தில் 4, அடுத்த பந்தில் 0, 4வது பந்தில் 4, ஐந்தாவது பந்து, இன்னும் 3 ரன் தேவை, ஒரே டென்சன், பாஸ்கர் அண்ணா சொன்னார், முடிந்தவரை விக்கெட் கீப்பருக்கு பின்னால் அல்லது சிலிப் பந்தை தட்டி விடப்பார், இரண்டு ரன் எடுத்தால் டை ஆகிவிடும், நாம விக்கெட் கம்மி தான், கடைசி பந்தில் ரன் வரவில்லை என்றால் நான் நோ பால் கொடுத்து விடுகிறேன் என்றார், எனக்கோ என்னமோ நடக்க போகுது என்ற பயம், சார்லஸிடம் சொல்லிவிட்டேன், பந்து வீசும் முன்பே பாதி மைதானம் வந்து விடு.

நானும் இருக்கும் அத்தனை தெய்வங்களையும் வணங்கி விட்டு மட்டையால் பந்த தடவ முயற்சிக்க, அது மட்டையில் படாமல் விக்கெட் கீப்பரிடம் போக, பாதி தொலைவில் நின்ற சார்லஸ் பாய்ந்து வர, பந்து எங்கே போனது என்று தெரியாமல் நான் ஸ்டெம்பை மறைத்துக் கொண்டு ஓட, விக்கெட் கீப்பர் என்னை ரன் அவுட் ஆக்க வீசிய பந்து என் காலில் பட்டு ஓட, நான் மீண்டும் இரண்டாவது ரன் எடுக்க விக்கெட் கீப்பரை நோக்கி ஓடி வர, சோம்பேறி சார்லஸ் நின்று கொண்டிருக்க , நான் அவனை விரட்டி விட்டு ஓடு என்று சொல்ல, பந்து சார்லஸ் திசைக்கு வீச, சார்லஸ் பந்தை பார்த்துக் கொண்டே ஓட, ஸ்டெம்ப் விழ, சார்லஸீம் கிரீஸில் விழ ஒரே டென்சன், அனைவரும் பாஸ்கர் அண்ணாவை சூழ்ந்துக் கொண்டார்கள். ரன் அவுட் கேட்டார்கள், அவர் கொஞ்சம் கூச்சப்படாமல் நாட் அவுட், ஷேப்பிலி ரீச்சிடு என்று ஆங்கிலத்தில் சொல்ல, உடன்குடி அணியினரில் சிலர் ஸ்டெம்பை உறுவ, அதுவரை ஆட்டம் பார்த்த எங்க ஊர் மக்கள் சிலர் அரிவாளை எடுத்து “வெக்காளி, வேட்டுல உடன்குடிகாரன்களை” என்று உள்ளே வர, மற்ற வீரர்கள் என்னையும் சார்லஸையும் சூழ்ந்துக் கொண்டார்கள், ஊர் பெரியவர்கள் அரிவாளை தூக்கியவர்களை திட்டி, சமாதானப்படுத்தி, வெளியே அனுப்பி, நடுவரும் உடன்குடி அணியினரும் சமரசம் பேச ஆரம்பித்தார்கள்.

பாஸ்கர் அண்ணாவிடம் எதிரணியினர் சொன்னது, காலில் பட்டு சென்ற இரண்டாவது ரன் கிடையாது, அப்படியே அது ரன் என்றால் சார்லஸ் அவுட். இதில் எதற்கும் பாஸ்கர் ஒத்து வரவில்லை. கொஞ்ச நேரத்தில் எதிரணியினர் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும், கடைசி பந்தில் 2 ரன் என்றால் நாங்க விளையாட வருவோம் என்றார்கள். எங்களிடம் பேசிய சார்லஸ் கவலையே வேண்டாம், நான் கடைசி பந்தில் 2 அடிப்பேன், என்று சொல்ல, அவன் தலையில் ஓங்கி மத்தவங்க அடிக்க, ஒரே டென்சன், “ஏலே வாயை மூடிட்டு சும்மா இருலே, ஒரு ரன் ஓட முடியலை, நீ என்னத்தை கிழிப்ப” என்று வேடிக்கை பார்க்க வந்தவங்க திட்டினார்கள். “

உடன்குடி அணியினர் எல்லாம் மைதானத்தை விட்டு வெளியே வந்து கூடி பேசத் தொடங்கினார்கள். பாஸ்கர் அண்ணா மற்றும் மற்றவர்கள் என்னையும் சார்லஸையும் போய் மைதானத்தில் நிற்க சொன்னார்கள். நாங்களும் போய் நிற்க, பாஸ்கர் அண்ணா மைக் வாங்கி அதில் “உடன்குடி அணிக்கு இன்னமும் 2 நிமிடம் நேரம் தரப்படும், அதற்குள் மைதானத்தில் இறங்கவில்லை என்றால் அவர்கள் டிஸ் கோலிபை, ரத்து செய்யப்படுவார்கள் என்று சொல்ல, உடன்குடி அணியினர் உள்ளே இறங்க வில்லை, உடனே அவசர அவசரமாக உடன்குடி அணியை ரத்து செய்வதாக அறிவிக்க, எங்க ஊர் அணி இறுதிப் போட்டிக்கு தகுது பெற்றது என்று அறிவித்து விட்டார், ஒரே அடிதடி, ரகளை. ஓவ்வொருவரும் மற்றவரை கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டார்கள். எங்க வீட்டில் வேலை செய்யும் சுப்பிரமணி அவர்கள் என்னைப் பார்த்து “தம்பி, இனிமேல் இங்கே நிக்காதீங்க, வாங்க போகலாம் என்று கையில் அரிவாளை எடுத்துக் கொண்டு எனக்கு பாதுகாப்பாக இருந்து வீடு கொண்டு வந்து சேர்த்தார். நான் அவரிடம் என் அம்மாவிடம் தயவு செய்து சண்டையை சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

மாலையில் பஜார் சென்று என் நண்பர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் சொன்ன வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது. மயக்கமே வரும் போல் ஆகிவிட்டது.

ஏமாற்றி தோற்கடிக்கப்பட்ட உடன்குடி வீரர்களும், மற்றவர்களும் என்னைத் தான் அதிகம் திட்டினார்களாம், “அவன் எப்படியும், ஒடன்குடி வரத்தானே செய்வான், அவனை அங்கே தலையை வெட்டி எடுத்துவிடுவோம்” என்று சவால் விட்டு சென்றார்களாம். எதுக்கும் கொஞ்ச நாளைக்கு உடன்குடி பக்கம் போகாதே என்று சொல்ல, எனக்கோ சொல்ல முடியாத அளவுக்கு பயம், வாரந்தோறும் உடன்குடி சந்தைக்கும், அடிக்கடி தேங்காய் எண்ணெய் ஆட்டி எடுக்க, கோப்பரை தேங்காயை உடன்குடிக்கு எடுத்துச் செல்வதும், கிணற்றில் மோட்டார் ரிப்பேர் ஆனாலும் கண்டென்சர் வாங்க உடன்குடி போக வேண்டுமே, என்ன செய்வது என்று பயந்தேன். நாலு, ஐந்து மாதம் உடன்குடி பக்கமே தலை வைத்து படுக்கவில்லை.

செமி பைனல் அருமையாக விளையாடியதற்கு எனக்கு ஆட்ட நாயகன் பரிசு கொடுப்பதாக சொன்னார்கள். பைனல் போட்டியில் வழக்கம் போல் திருநெல்வேலி அணி வந்தார்கள், சின்னபசங்க எங்களைப் பார்த்து கேலி செய்தது மட்டுமல்லாமல் உடன்குடி அணியை ஏமாற்றியதையும் சொல்லி சிரித்தார்கள். எங்களுக்கு இரண்டாவது பரிசு கிடைத்த மகிழ்ச்சி, அதுவே போதும் என்ற நிலையில் பைனலில் திருநெல்வேலி அணியிடம் தோற்று போனோம். முதலில் பேட் செய்த எங்களை 70 ரன்னுக்கும் குறைவில் ஆட்டமிழக்க செய்து, அதை 8 ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து விட்டார்கள். ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை.

வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, அரையிறுதி, இறுதிப் போட்டியின் நாயகனுக்கான பரிசு எல்லாம் இரவில் எங்க ஊர் எம்.எல்.ஏ கையால் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள்.

எங்க வீட்டில் எங்க அம்மா, மாலையில் 6 மணிக்கு மேல் வெளியே செல்ல அனுமதிக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மட்டும் மாயாண்டி சுவாமி கோயிலுக்கு போக அனுமதி, அதுவும் அவர்கள் வந்தால் மட்டுமே. அன்றைக்கு தான் தேங்காய், பதநீர் திருடும் படலம் நடக்கும் (அடுத்த பதிவில் சொல்கிறேன்).

ஆக மொத்தம் என்னால் அந்த பரிசை வாங்க முடியவில்லை, அடுத்த நாள் போய் எங்க அணியினரிடம் கேட்டால் அந்த பரிசை சுதாகர் அண்ணா தான் வாங்கினார் என்று சொல்ல, நான் கேட்க, அவர் என்னிடம் இல்லையே என்று சொன்னார்கள். எனக்கு சரியான டென்சன், உடனே “மரியாதையாக யார் கிட்ட இருக்கு என்று சொல்லுங்க, இல்லேன்னா, என் பரிசை வைத்திருப்பவர் குடும்பத்தையே கெட்ட வார்த்தை சொல்லி திட்டப் போறேன்” என்று சொல்லி மிரட்ட, உடனே அந்த எவர்சில்வர் குடம் எனக்கு பரிசாக கிடைத்தது.

அதே காலக்கட்டத்தில் மீண்டும் பல போட்டிகள், அடிதடிகள், தினம் தினம் புதுப் புது அணிகள், புதிய கேப்டன்கள் என்று நிறைய அனுபவங்கள். ஒன்று சொல்ல மறந்துட்டேனே, எந்த அணி என்னை வெட்டுவேன் என்று சொன்னதோ, அதே அணிக்கு 6 மாதம் பின்னர் விளையாடினேன். ஆமாம், ஒரு நாள் உடன்குடி அணியின் ஒரு ஆட்டக்காரர் எங்க ஊர் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தார், நான் அவரை பார்த்து சிரித்து பேச, அவர் உடனே “நாளை நாங்க திசையன்விளையில் ஒரு போட்டி ஆடப் போகிறோம், நீங்க விளையாட தயாரா” என்று கேட்டார். நான் ஆகா திட்டம் போட்டு சாத்தப் போறாங்க என்று நினைத்தேன். நான் யோசிப்பதை பார்த்த அவர் “நீங்க இன்னமும் பழசை மறக்கவில்லையா, நாங்க எங்கே போனாலும் கப்பு எடுக்கிறோமோ இல்லையோ, தலையை எடுக்கிறோம் என்று சொல்லிவிட்டு தான் வருவோம், அது எல்லாம் சும்ம, பயப்பட வேண்டாம், வரும் போது மெல்கியையும் அழைத்து வாங்க என்றார், நாங்க இருவரும் போய், உடன்குடி அணிக்கு விளையாடி வென்று கொடுத்தோம். அது மறக்க முடியாத சம்பவம்.

அதன் பின்பு +1, +2 வகுப்புகளில் ஆடிய ஆட்டங்கள் ஏராளம். ஒரு முறை காயல்பட்டிணத்தில் ஒரு போட்டி, செய்தி தாளில் பார்த்து தலைமை ஆசிரியரிடம் சொல்லி அனுமதி வாங்கி அணியின் பெயரை சேர்த்தாசு. முதல் போட்டி தூத்துக்குடி பள்ளி அணிக்கு எதிராக, களவாணிப் பயலுக ஆதித்தனார் கல்லூரி படிக்கும் 3 பேரை பள்ளி மாணவர்கள் என்று கொண்டு வந்துட்டானுங்க, நானோ கல்லூரியில் படிக்கும் மெல்கியை அழைத்து போயிருந்தேன், என்னாலும் அவர்களை குற்றம் சொல்ல முடியவில்லை. எங்க அணியில் நன்றாக ஆடும் மனோகர் முந்தைய நாளில் சரக்கு ஏற்றி, படுத்தானாம், கடைசி வரை மைதானம் வரவில்லை, நல்ல வேளையாக ஆட்டம் பார்க்க எங்க நண்பன் டேனியல் வந்திருந்தான். நான் டாஸ் வென்று பவுலிங்க் எடுக்க, சிமெண்ட் பிட்ச்சில் மேட் போட்டிருந்தார்கள். அது என்னடா என்றால் எக்ஸ்ட்ரா சுவிங்க் ஆகி வைட், தொடர்ந்து 3 வைட், என் பள்ளி அணியில் என்னை பிடிக்காத வின்ஸி, சோமு, எல்லாம் என்னை கிண்டல் செய்ய, சரியான ஆத்திரம், அடுத்த இரண்டு பந்தில் விக்கெட் வீழ்த்தி, அவனை திட்டு திட்டு என்று திட்டி தீர்த்தேன்.

அந்த போட்டியில் தோற்று போனோம், ஆனால் மறக்க முடியாத சம்பவம் ஒன்று, அதான் சொல்கிறேன். நான் அவுட் ஆகி வர, வரிசையாக விக்கெட் மழை, இன்னும் 2 விக்கெட் இருக்குது டேனியலை கூப்பிட்டு, நீ ஆட போகிறாயா என்று கேட்க அவனும் ஓகே சொல்லிட்டான், நாங்க இடது காலில் மட்டுமே கால்காப்பு கட்டுவோம், இரண்டு காலில் கட்டுவது இல்லை, நான் வழக்கம் போல் அவனுக்கு இடது காலில் கால்காப்பு கட்டி விட, அங்கே போன அவன், இடதுகை ஆட்டக்காரன் போல் நிற்க, வலது கால், கால்காப்பு இல்லாமல், இடது காலில் கால்காப்பு இருக்க, அம்பயர் முதல் எதிரணி முழுவதும் சிரிக்க, தோற்கும் நிலையில் இருந்த எங்களுக்கும் ஓரே சிரிப்பு, அவனும் அதை வைத்தே ஆடி, அவுட் ஆகி வந்தான்.

என்னால் வெற்றி பெற்ற போட்டிகளை விட என்னால் தோற்ற போட்டிகள் அதிகம் இருக்கும். போன வேகத்தில் முதல் பந்திலேயே சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு கேட்ச் கொடுத்து வந்த போட்டிகள் நிறைய, அது மாதிரி ஒரே ஓவரில் 8, 10 வைட் போட்டு அத்தோடு மைதானம் விட்டு ஓட்டம் எடுத்த போட்டிகளும் உண்டு.

+2 படிப்பு முடித்ததும், அதற்கு மேல் கல்லூரியில் படிக்க வீட்டு பொருளாதாரம் கையை விரிக்க, என் அண்ணன்கள் (பெரியப்பா மகன்கள்) உதவ, நான் சென்னை மேற்கு மாம்பலம் வந்தேன், அங்கே பனகல் பார்க்கில் பிரையன்ஸ் அண்ட் பிட்ஸ் என்ற தனியார் கணினி கல்விக்கூடத்தில் டிப்ளமோ படித்தேன். அந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் அதிகம் விளையாட முடியவில்லை. ஒரு வருடம் படித்து, உடனே வேலைக்கு தூத்துக்குடி சென்றேன், அங்கேயும் விளையாட முடியவில்லை, பின்னர் வண்ணாரப்பேட்டையில் ஒரு ஷாப்பிங் செண்டரில் மொத்த கணினி துறையை பார்த்துக் கொள்ளும் வேலை, 3 வருடங்கள், அப்போ ஞாயிற்றுக்கிழமைகளில் வண்ணாரப்பேட்டை பார்க், தியாகராய கல்லூரியில், கல்மண்டபம் பகுதியில் விளையாடி இருக்கிறேன், அப்புறம் இங்கே வந்ததும், என் வாழ்க்கையில் நிறைய பரிசுகள், பதக்கங்கள் வாங்கியது, நம்ம தினேஷ் கார்த்திக்குடன் விளையாடியது போன்றவை இங்கே நிகழ்ந்தன, 10 ஆண்டுகள் ஆகியும், இன்றும் தொடர்கிறது. கிரிக்கெட் நினைவலைகள் முடிந்தது.

(நினைவலைகள் ஓய்வதில்லை ….)

Tuesday, October 04, 2005

என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)

என் நினைவலைகள் – கிரிக்கெட் (3)

எங்க ஊரில் கிரிக்கெட் விளையாடுவதை விட வெளியூரில் சென்று விளையாட இருக்கிறோம் என்றால் அதற்கு முந்தைய இரவில் தூக்கமே வராது, எப்போடா விடியும் என்று தோணும். ஒருவழியாக விடிந்தப் பின்பு அம்மாவிடம் கையை பிடித்து, காலைப் பிடித்து, கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கி, முதல் ஆளாக பஜாரில் போய் நிற்பேன், ஒவ்வொருவராக வர வர சந்தோசம் கூடும். 10 கிலோமீட்டருக்குள் அமைந்த ஊர் என்றால் சைக்கிளில் செல்வோம் அல்லது பஸ் தான். ஒரு போட்டிக்கு குறைந்தது 20 பேர் செல்வோம், ஆனால் பஸ்ஸில் எடுப்பதோ 8 அல்லது 10 டிக்கெட் தான், கண்டக்டர் டிக்கெட் டிக்கெட் என்று முன்பக்கம் வந்தால் டிக்கெட் எடுக்காதவங்க பின்பக்கம் போய் ஏறிக் கொள்வோம், பின்பக்கம் வந்தால் முன்பக்கம், தனியார் வண்டியில் ஏறுவது இல்லை காரணம், இரண்டு கண்டக்டர்கள் இருப்பார்களே!.

பஸ்ஸில் போகும் போது படபடக்கும், டிக்கெட் கூட பரவாயில்லை, நம்ம பசங்க வண்டியில் கையை, காலை வச்சிகிட்டு சும்ம வரணுமே. கிண்டல், பாட்டு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக போய் வருவோம். வெற்றி, தோல்வி எல்லாம் எங்களை பாதிக்காது.

நாங்க வாராவாரம் கிரிக்கெட் விளையாட போவது பூச்சிக்காடு என்ற ஊர், சைக்கிளில் செல்வோம், அங்கே இருந்த குளத்தில் தான் கிரிக்கெட் விளையாடுவோம், நல்லா புல் முளைத்திருக்கும், அங்கே தான் நான் பாய்ந்து பாய்ந்து விழுந்து பந்தை தடுப்பேன், அடியே படாது. அங்கே மாதவன் என்ற அருமையான பேட்ஸ்மேன், டிவிசன் போட்டிகளில் விளையாடியவர், அவருக்கு என்னைக் கண்டாலே அலர்ஜி, அருமையாக விளையாடுவார், எங்க சீனியர்கள் பந்து வீசி முடித்தப் பின்பு 4வது பந்து வீச்சாளராக நான் வருவேன், அதற்குள் அவர் 40 அல்லது 50 ரன்கள் சேகரித்து விடுவார், நான் போட்ட முதல் ஓவரிலேயே அவுட் ஆகி விடுவார். ஒரு மாதிரியா என்னை பார்த்து விட்டு போவார். இதை ஒருவழியாக கண்டுபிடித்த என் அணித்தலைவர் ரவிகுமார் என்னை 5 அல்லது 6வது ஓவரிலேயே பந்து வீச அழைப்பார், நானும் வருவேன், மாதவன் விக்கெட்டை எடுப்பேன், மீண்டும் பீல்டிங்க் செய்ய போய் விடுவேன், ஏனென்றால் மத்தவங்க சாத்தி புடுவாங்க. இறுதிக்கட்டத்தில் பந்து வீச சந்தர்ப்பம் கிடைக்கும்.

பேட்டிங்க் எடுத்துக் கொண்டால் எனக்கு 5 அல்லது 6 வரிசையில் வாய்ப்பு கிடைக்கும், ஆனால் 10 ஓவருக்குள்ளேயே பேட்டிங்க் செய்து விடுவேன், எங்க முன்னணி ஆட்டக்காரர்கள் வெகு விரைவில் அவுட் ஆகி விடுவாங்க, அப்புறம், நானும் மத்தவங்களும் டொக்கு போட்டு 25 அல்லது 30 ஓவர்கள் வரை நின்று ஆடி விடுவோம். எனக்கு கபில் மாதிர் பேயாட்டம் ஆட ஆசை, ஒரு பந்தை ஆசைப்பட்டு ஓங்கி அடித்து அது 4 போனாலும், அங்கே கேப்டன் ஏதாவது சொல்லி திட்டுவார், மொவனோ அவுட் ஆகி மட்டும் வா, குளத்திலேயே முக்கி விடுவேன் என்பார், ஏதோ அவர் 50 அடித்த மாதிரி.

கொஞ்ச நாளில் பாஸ்கர் அண்ணா கேப்டன் ஆனார், அதன்பின்பு எனக்கு அணியில் தனி மரியாதை, அவர் என்னை வலதுகரம் போல் பாவித்தார். நல்ல ஆட்டக்காரர், நிறைய நுணுக்கங்களை பந்து வீச்சில் சொல்லிக் கொடுத்தார்.

அப்போ ஒரு நாள் ஜெயராஜ் அண்ணா, சுதாகர் அண்ணா, சார்லஸ் அண்ணா (சீனியர்) ஜோசப் அண்ணா எல்லோரும் பேசிக் கொண்டிருந்த போது நாம ஏன் டோர்ணமெண்ட் நடத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டோம், உடனே எல்லோரும் சரி நடத்தலாம் என்றதும், கையில் ஒரு 50 பக்க நோட்டை எடுத்தாச்சு, மொத ஆளாக டாக்டர் மாமா தம்பிராஜை போய் பார்த்தோம், அவர்கள் ரொம்ப மகிழ்ச்சியாக 500 ரூபாய் முதல் பரிசாக கொடுப்பதாக சொன்னாங்க, அடுத்தது பஞ்சாயத்து தலைவர் பாண்டியன் 250 ரூபாய் இரண்டாவது பரிசு, அதிமுக செயலாளர் தொடர் ஆட்டக்காரர் விருதை கொடுத்து உதவினார்.

அப்புறம் பஜாரில் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி, 5, 10ம், திட்டும் வாங்கி ஒரு 200 ரூபாய் தேத்திட்டோம். உடனே அனைத்து ஊருக்கும் சொல்லி அனுப்பியாச்சி, அணியின் நுழைவுக்கட்டணம் 50 ரூபாய், மொத்தம் 8 அணிகள். நாக் அவுட் போட்டி என்று சொல்லியாச்சு.

டோர்ணமெண்ட் நடத்தும் அளவுக்கு மைதானம் ஊருக்கு வெளியே தேரியில் தான் இருந்தது, அங்கே போய் மாட்டு வண்டி வைத்து வண்ணாங்குளத்தில் களிமண் வெட்டி கொண்டு வந்து கொட்டி, ரோலர் போட்டு அருமையான மைதானம் உருவாக்கினோம். மைக் செட், தண்ணீர் பந்தல் என்று அருமையாக தயார் செய்தாச்சு.

எங்க ஊரு அணி, உடன்குடி, மெஞ்ஞானபுரம், பூச்சிக்காடு, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி அணி, நாசரேத் அணி, திருநெல்வேலி அணி இப்படியாக 8 அணிகள். நாங்க எளிதாக வெற்றிக் கொள்ளும் அணியை எங்களுக்கு எதிராகப் போட்டு செமி-பைனல் வந்தாச்சு, அதில் வெற்றிப் பெற்றால் குறைந்த பரிசான ரூபாய் 250 கிடைக்கும், பேட், கால்காப்பு எல்லாம் வாங்கலாமென்று திட்டம் போட்டிருந்தோம்.

முதல் ஆட்டத்தில் எங்க பெரியம்மா பையன் ஜெகன் அண்ணா அருமையாக ஆட மெஞ்ஞான புரம் அணியை வென்றோம். செமி பைனலில் திருநெல்வேலி அணி, அதில் ரமணி என்ற ஒரு ஆட்டக்காரர், மிக அற்புதமாக ஆடினார், நான் அவர் ஆட்டத்தை மிகவும் ரசித்தேன், எங்க அணியை போட்டு துவைத்து எடுத்திட்டார். 30 ஓவரில் 220 ரன்கள். ரமணி மட்டுமே 80 ரன்களுக்கு மேல், நல்ல வேளை நான் பந்து வீசும் முன்பே அவுட் ஆகிட்டார்.

அப்புறம் எங்க மக்கா, விளையாட போனால், நம்ம கங்குலி மாதிரி போன வேகம் தெரியாம வெளியே வந்து, சர்பத் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க, ஏதோ 50 அடித்த களைப்பு மாதிரி. மேட்ச் பார்கக் வந்த பெரியவங்க எல்லாம் எங்க அணியின் முண்ணனி ஆட்டக்காரர்களான ஜெகன், சுதாகர், பாஸ்கர், ஆண்ட்ரூ, மெல்கி, மூர்த்தி எல்லோரையும் கன்னாபின்னா என்று திட்டத் தொடங்கிட்டாங்க. அப்புறமா நான் இறங்கும் போது ஒரு ரன் எடுத்தாலே அது நமக்கு பெருமை தான் என்று நினைத்தேன். நானும் சார்லஸீம் கட்டை போட்டு, திருநெல்வேலி அணியை கடுப்பேற்றி விட்டோம், 15 ஓவர்கள் வரை தாக்கு பிடித்தோம், அதில் நான் இரண்டு சிக்ஸர் தூக்கி விட, எங்க மக்களுக்கு ஒரே கொண்டாட்டம். செமி பைனலில் தோற்றதும், பைனலில் திருநெல்வேலி அணி வெற்றி பெற்று சுழல் கோப்பை தூக்கியது. ரமணி தொடர் நாயகன் பட்டம் வென்றார், அவரோடு கை குலுக்கியது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.

ஒருமுறை சாத்தான்குளத்தில் கிரிக்கெட் விளையாட என்னை உடன்குடி பள்ளி அணி சிறப்பு ஆட்டக்காரராக அழைத்தார்கள். நாங்களும் பக்கத்து ஊரில் நன்றாக விளையாடும் ஆட்டக்காரர்களை அழைத்துக் கொள்வோம். அப்படி சென்ற போது அந்த போட்டியானது 10 வரை படிக்கும் மாணவர்களுக்கானது, என்னைப் பார்த்ததும், என்னை விளையாட அனுமதிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காரணம் கேட்டதற்கு கல்லூரி மாணவன் இப்போட்டியில் விளையாட முடியாது என்று சொல்ல, நாங்க நான் 9வது தான் படிக்கிறேன் என்று சொல்ல, அவர்கள் நம்பவில்லை.

அவர்களை எப்படி நம்ப வைத்தேன் தெரியுமா, ஒரு வாரத்திற்கு முன்பு தேர்வு எழுதிய கேள்வி, பதில்களை ஒன்று விடாமல் சொல்லி, நான் 9வது வகுப்பு தான் படிக்கிறேன் என்பதை நிறுபித்தேன். போட்டியில் நான் போட்ட முதல் பந்திலெயே விக்கெட் எகிற, மீண்டும் பிரச்சனை, ஒருவழியாக சமாளித்து வென்று, பரிசை வாங்கி வந்தோம். அவ்வாறு பரிசு வாங்கினால், ஹோட்டலில் பரோட்டாவும், சால்னாவும் வாங்கி கொடுப்பாங்க.

மாலை நேரங்களில் பள்ளியில் விளையாடும் போது, மாணவிகளை கவர சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு, கிளின்போல்ட் ஆனது பலமுறை. தெருவில் விளளயாடும் போது வரவங்க போறவங்க மேலே அடிபட, பேட்டை தூக்கிப் போட்டு ஓடியதுண்டு, சில நேரங்களில் லாரியில் பந்து விழ, லாரி ஓட, நாங்க பந்தை எடுக்க சைக்கிளில் லாரியை விரட்டியதுண்டு. சில நேரம் மத்த அணியிடம் விளையாடும் போது அவர்களது பந்துக்களை சுட்டுக் கொண்டு வந்து விடுவோம்,அதற்கு என்று சிறப்பு பயிற்சி பெற்றவர்கள் உண்டு.

இப்படி தான் ஒரு முறை திருச்செந்தூர் ஹாஸ்டல் அணியுடன் கிரிக்கெட் போட்டி, எப்போவும் இல்லாமல் அன்றைக்கு பார்த்து சுதாகர் அண்ணா லுங்கி கட்டி வந்தார், அப்புறம் பேட்டிங்க் செய்ய போய் சரியான அடி வாங்கி, பெரிய மரம் சாய்ந்து விழுந்த மாதிரி கீழே விழுந்தார், அப்புறம் மீண்டும் லுங்கியை கட்டிக் கொண்டு நடகக் முடியாமல் நடந்து சீக்கிரம் மைதானத்தை விட்டு வெளியே போயிட்டார். மாலையில் அவர் வீட்டுக்கு போனால் புத்தம் புது எஸ்.எஸ் பேட், எப்போ அண்ணா வாங்கினீங்கன்னு கேட்டா, எப்படி சுட்டேன் என்று கேளுடா என்று சொன்னார், அப்புறம் தான் தெரியும் அது காலை போட்டியில் சுட்ட புது பேட், அதை தான் லுங்கியில் வைத்து மறைத்து கொண்டு வந்திருக்கிறார். இப்படி நிறைய கதைகள் உண்டு.

இதற்கிடையில் என்னுடைய கிரிக்கெட் வெறி அடங்காமல் போக, அடிக்கடி அடி பட்டு வர, அதைக் கண்ட அம்மா பயந்து, என்னை விளையாட விடமாட்டேன் என்று சொல்லத் தொடங்கி விட்டார்கள். நானும் என் அம்மாவிடம் நூலகம் செல்கிறேன், தேவகுமார் வீட்டிற்கு செல்கிறேன், ஸ்பெஷல் கிளாஸ் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு, கிரிக்கெட் விளையாட போய் விடுவேன். நான் விளையாட போனது எப்படியாவது என் அம்மாவுக்கு தெரியவரும்.

தெருவில் போறவங்க சும்மா இருக்காம, என் பெயரைச் சொல்லி, அடிச்சான் பாரு ஒரு சிக்ஸர் சூப்பர் சிக்ஸர்பா, ஓடி போய் ஒரு கேட்ச் எடுத்தான் பாரு, அருமை என்று சொல்ல, என் அம்மாவோ என்னை ஆரத்தி எடுத்து வரவேற்க தயாராக இருப்பாங்க. 7வது வகுப்புக்கு மேல் அம்மா என்னை அடிப்பதை நிறுத்திட்டாங்க (எருமைமாடு மாதிரி சொரணை இல்லாதது ஒரு காரணம்). என் கிட்ட பேசவே மாட்டாங்க, அது எனக்கு பெரிய தண்டனையாக இருக்கும்.

அந்த நிலையில் 10வது படிக்கும் போது அம்மா என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டாங்க, இனிமேல் கிரிக்கெட் பக்கமே தலை வைத்து படுக்க மாட்டேன் என்று அவர்கள் தலையில் அடித்து சத்தியம் செய்ய சொல்ல, நான் செய்த சத்தியத்தை 6 மாதங்களுக்கு மேல் கடை பிடித்தேன், என் சத்தியத்தை என் அம்மாவே வாபஸ் வாங்கிய கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.



(நினைவலைகள் ஓய்வதில்லை ….)

Sunday, October 02, 2005

என் நினைவலைகள் – கிரிக்கெட் (2)

(நண்பர்களே! என் நினைவலைகள் வாயிலாக என் வாழ்க்கையில் நடந்த அனைத்து சுவாரஸ்யமான விசயங்களை சொல்ல இருக்கிறேன், முதலில் கிரிக்கெட், கபாடி, இப்படி அனைத்து விளையாட்டுகளை சொல்கிறேன்)


என் நினைவலைகள் – கிரிக்கெட் (2)

இப்போ எங்க அணியைப் பற்றி சொல்கிறேன், எங்க தெருவில் இரு குருப், ஒன்று மூர்த்தி அண்ணா தலைமையில், அடுத்தது பிர்லா போஸ் அண்ணாவின் தலைமையில். பிர்லா போஸ் அண்ணாவும், அணியினரும் எங்க வீட்டிற்கு அருகில் இருக்கும் அஜிதா நர்சரி பள்ளியின் பின்புறம் விளையாடுவோம், அருகிலேயே எங்க சித்தப்பாவின் தோட்டம் உண்டு. ஒரு பிரச்சனையும் இருக்காது, பந்து மட்டும் அடிக்கடி ஏதாவது மரத்தில் மாட்டிக் கொள்ளுங்க, அதை எடுக்க எறிந்த செறுப்புகள் மாட்டி, அதை எடுக்க பட்டப்பாடுகள் வேறு.

பிர்லா போஸ் அண்ணாவின் அணியில் குறைந்த ஆட்டக்காரர்கள் தான், ஒரு பிரச்சனையும் கிடையாது, எல்லோருக்கும் சம வாய்ப்பு, மரியாதை, ஆனால் தினமும் விளையாட மாட்டோம் அது தான் பிரச்சனை. போஸ் அண்ணா கிரிக்கெட் நுணுக்கங்களை பொறுமையாக சொல்லிக் கொடுப்பாங்க.

மூர்த்தி அண்ணாவின் அணி அப்படியே எதிர்மறை, எக்கச்சக்கமான ஆட்டக்காரர்கள், முரட்டு ஆட்டக்காரர்கள், வந்தோர் போனோர் எல்லாம் ஆட்டக்காரர்கள், தெருவில், ரோட்டில், வீட்டில், எங்கேயாவது 10 மீட்டர் இடம் கிடைத்தால் அதில் விளையாடுவார்கள். அதில் அதிக அதிகாரம் மூர்த்தி அண்ணாவுக்கு, அடுத்தது குருஸ் பெண்டாண்டஸ் அவன் அடிக்கடி பந்து வாங்கி கொடுப்பான் (அவங்க அப்பா கப்பலில் வேலை செய்தார்), அப்புறம் சார்லஸ், அவனிடம் ஒரு உண்மையான பேட் இருந்தது. அவர்கள் மூவரும் களைத்துப் போனால் தான் மற்றவர்களுக்கு பேட்டிங்க் கிடைக்கும். சார்லஸ் மட்டை போட்டால் கவாஸ்கர் தோற்றுவிடுவார், அதனால் அவனுக்கு கவாஸ்கர் என்று பெயர். நான் எப்படியும் கபில்தேவ் என்ற பெயரை வாங்க வேண்டும் என்ற வெறி, அதுக்கு முதல் போட்டி மூர்த்தி அண்ணா தான். அவரை முந்த வேண்டும் என்ற வெறி, பொறாமை மனதில் தோன்றியது.

அப்போ நான் பந்து வீச பழக ஆரம்பித்தேன், எனக்கு ஒரு குறை என்னுடைய இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டச் சொன்னால் அது நேர்க்கோட்டில் இராமல் வளைந்து போய் நிற்கும், என்னை கோணக்கையன் என்பார்கள். நான் முதலில் ஸ்பின் போட்டேன், அப்போ நான் துரோ செய்கிறேன் (அப்போவே எங்க மக்க இத்தனை டிகிரியில் தான் வீச வேண்டும் என்று சட்டம் போட்டிருந்தார்கள்) என்றார்கள். அப்போ துரோ செய்வது தெரியாமல் இருக்க வேகப்பந்து போட ஆரம்பித்தேன். அப்போவும் துரோ என்பார்கள்.

Image hosted by Photobucket.com

வேகமாக ஓடி வந்து, குரங்கு மாதிரி குதித்து போடுவேனா, மக்களுக்கு என் கையை பார்க்க வாய்ப்பு இல்லாமல் போய் விடும். என் கையை நேராக்க என் தம்பியை மிதிக்கச் சொல்வேன், அம்மாவிடம் ஏன் என் கை இப்படி வளைந்து போய் இருக்குது என்பேன், அதற்கு தாயைப் போல பிள்ளை என்று அவரது கையை காட்டுவார்.

அப்புறம் என் கையை நன்றாக சுத்த, வீட்டில் சும்மா இருக்கும் போது எல்லாம் பந்து வீசுவது போல் வீசிக் கொண்டிருப்பேன், வெள்ளாளன் விளையில் பிஷப் அசரியா பள்ளியில் படிக்க 3 கிலோமீட்டர் நடக்க வேண்டும், அப்படி செல்லும் போது ரோட்டில் கிடைக்கும் கருங்கல், கொமட்டிக்காய், பனங்கொட்டை எல்லாம் எடுத்து வீசிக் கொண்டே செல்வேன். என் புத்தகமூட்டையை என் தம்பி முதுகில் ஏற்றி, அவனை ஏதாவது ஒரு சைக்கிளில் கெஞ்சி, கூத்தாடி ஏத்தி அனுப்பி விடுவேன். சில சமயம் நான் வீசும் கருங்கல் பந்து ரோட்டில் போற சைக்கிளை தாக்க, அவங்க விரட்டி விரட்டி அடித்தது எல்லாம் உண்டு.

இப்படியாக வெறித்தனமாக பவுலிங்க் தான் முக்கியம் என்று எந்த நேரமும் பந்து வீசுவதிலேயே இருந்தேன். சில சமயம் மூர்த்தி அண்ணா என்னை ஏமாற்றி தொடர்ந்து மணிக்கணக்கில் பந்து வீச வைத்து, அவர் காய்ச்சு காய்ச்சுவார். நானும் ஏமாளி போல் பந்து வீசி, பேட்டிங்க் பண்ண வந்தால், நேரமாகிவிட்டது, மாலையில் விளையாடலாம், நீ தான் முதலில் பேட் செய்வாய் என்று அல்வா கொடுத்த நாட்கள் எண்ணிக்கையில் அடங்காது.

இப்படியாக நான் தொடர்ந்து பந்து வீசி, மூர்த்தி அண்ணாவுக்கு அடுத்து பந்து வீசும் பந்து வீச்சாளர் ஆனேன், சில நேரம் அவரை விட நான் அதிக விக்கெட்களை வீழ்த்தினால் அன்று முழுவதும் என்னை ஏதாவது சொல்லி கடுப்பேத்துவார்.

இப்படியாக நான் எங்க ஊரில் மாணவப்பருவத்தில் பந்துவீச்சாளனாக அடையாளம் காணப்பட்டேன். பின்னர் வெள்ளாளன் விளையில் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து கிரிக்கெட் அணியை தொடங்கினேன், அதே அணியை நான் தலைமை தாங்கி, என் சொந்த/மூர்த்தி அண்ணாவின் அணியை தோற்கடித்து மகிழ்ந்தேன். அப்போ அங்கே தேவ ஆசிர்வாதம், இம்மானுவேல், மெல்கி, தங்கதுரை, நைனார், சேகர், சித்திரைக்குமார், ஐசக், கிருஷ்ணகுமார், குமரன் ஒரு அணியை தொடங்கியாச்சு. 8ம் வகுப்பு எங்க அணி 12வது வகுப்பு மாணவ அணியையே தோற்கடித்து பிரமிப்பு உண்டாக்கினோம், ஆசிரியர்கள் எல்லாம் உலக நிலைமை புரியாமல் நீ கண்டிப்பாக இந்தியாவுக்காக ஆடுவாய் என்று சொல்ல, நானோ தினமும் கனவில் மிதந்தேன், பஸ் ஏறி தூத்துக்குடி போகத் தெரியாத நான், டெல்லிக்கு போவது போல் கனவு கண்டேன், என் குரு கபில்தேவுடன் சேர்ந்து கடைசி ஓவரில் இம்ரான் கானின் 6 பந்தையும் சிக்ஸர் அடித்து கோப்பை வாங்குவது போல் கனவுகள் அடிக்கடி வரும்.

எங்க ஊரில் ஒருவழியாக ரப்பர் பந்தை விட்டு, கிரிக்கெட் பந்தில் விளையாடும் நிலைக்கு வந்தேன், நான் எட்டாவது படிக்கும் போதே கல்லூரி மாணவர்கள் அணியில் விளையாடத் தொடங்கினேன், நான் தான் போர்ட் கருப்பட்டி, அதாவது கடைக்குட்டி. பந்து பொறுக்குதல், தண்ணீர் கொண்டு போய் கொடுப்பது, பேட்ஸ்மேனுக்கு கால்காப்பு கட்டி விடுவது, பந்து கிழிந்து போனால் போய் தைத்து வருவது, போட்டி முடிந்ததும் ஸ்டெம்ப் மூட்டைகளை தூக்கி வருவது, போட்டியில் ஸ்கோர் போடுவது எல்லாம் எனது வேலை.

எனக்கு கிரிக்கெட் பந்தை கண்டால் கொஞ்சம் பயமுண்டு, எங்க ஊரு மாக்கான் (தடி) பந்து வீச்சாளர்கள் மத்தவங்க உடம்பை பதம் பார்த்தது கண்டு மிரண்டு போயிருக்கிறேன்.

நாங்க கிரிக்கெட் பந்தில் விளையாடும் மைதானம் எங்க ஊர் நூலகத்தின் பின்னால் இருந்தது, சாப்பிட்டு விட்டு 3 மணிக்கே நூலகத்தின் முன்னால் இருக்கும் கிணற்றின் மேல் அமர்ந்திருப்பேன், நூலகம் திறந்தால் அங்கே போய் பத்திரிக்கைகள் படிப்பேன் (அங்கே தான் புத்தகம் படிக்கும் ஆவல் தொடங்கியது), ஒவ்வொருத்தராக வர வர மகிழ்ச்சியாகி கிரிக்கெட் மைதானம் செல்வேன், அங்கே சென்ற காலத்தில் தான் என்னுயிர் நண்பன் தேவகுமாரை சந்திக்கவும், பேசவும், பழகவும், உருகவும் வாய்ப்பு கிடைத்தது.

கிரிக்கெட் பந்தில் விளையாட சென்ற போது அங்கே மூர்த்தி அண்ணாவுக்கு பதில் ரவிகுமார் என்ற எங்க ஊரு கல்லூரி அணித் தலைவர் எனக்கு எமன் ஆனார். முதலில் அவருக்கு வடக்குத் தெரு ஆள் என்பதால் பிடிக்காது, இரண்டாவது என்னுடைய பந்து வீச்சு. பாவம் மனுசன் சில நேரம் என்னை பந்து வீச சொல்லி பேட்டிங் செய்யலாம் என்று நினைப்பார், நானோ அவரை போல்ட் செய்து விடுவேன், உடனே சுதாகர் அண்ணா, மதி அண்ணா, பாஸ்கர் அண்ணா எல்லோரும் அவரை கிண்டல் செய்ய அவருக்கு என் மீது கடுப்பு கூடும். உடனே ஏதாவது நொண்டிச் சாக்கு சொல்லி, என்னை மீண்டும் பந்து வீசச் சொல்லுவார், என் கெட்ட நேரம் அடுத்த பந்திலும் அவர் போல்ட், இப்படி ஓவருக்கு இரண்டு முறை போல்ட் ஆகி விடுவதால் என்னை கண்டாலே அவருக்கு பிடிக்காது. மேலும் அவர் தன் கடுப்பை தீர்க்க, எல்லோரும் விளையாடிய பின்பு கொஞ்சம் இருட்டத் தொடங்கும் நேரம், தம்பி நீ வா, பேட்டிங் செய்ய வா என்று அண்ணாவைப் போல அன்பாக அழைப்பார், என்னை கால்காப்பு கட்டவும் விட மாட்டார், சீக்கிரம் வா, நேரமில்லை, 2 ஓவர் விளையாடு என்று கூறி, என் காலை குறிவைத்து பந்து வீசுவார், நானோ பெரிய மட்டையின் பின்னால் ஒளிந்துக் கொள்வேன், என்னுடைய மகா கெட்ட நேரம், அது மட்டையில் பந்து வீக்கெட் கீப்பரை தாண்டி 4 ரன்கள் போக, அவருக்கு இன்னமும் சூடு ஏறி, முத்துநகர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வீச ஓடி வருவார், சில நேரம் பேட்டை போட்டு விட்டு ஓடியும் இருக்கிறேன்.

Image hosted by Photobucket.com

இப்படியாக இருக்க ஒரு நாள் புத்தம் புது பந்து பளபளக்க, சும்மா இருந்த என்னை வா, பேட்டிங் பண்ணு என்று சொல்ல, சதி விளையாட, விதி சிரிக்க, நானோ வழக்கம் போல் மட்டையை நேராக தூக்கி பிடிக்க, அவர் வீசியதோ சரியான யார்க்கர், அது என் கால் பாதத்தின் நடுவிலும், எலும்புகள் சேரும் இடத்தில் குறி வைத்து தாக்க, அவ்வளவு தான் என்னட அம்மே என்று ஒரு சுத்து சுத்தி விழுந்தேன், அவ்வளவு தான் தெரியும், அடுத்து விவேக் மாதிரி நான் எங்கே இருக்கேன் என்று கேட்க, எதிரே ஊசியோடு டாக்டர் மாமா தம்பிராஜ் நிற்க, கண்ணீரோடு அம்மா. ஒரு வாரம் படுத்த படுக்கையாக இருந்தேன், அதன் பின்பு கிரிக்கெட் பக்கம் ஒரு மாதம் வரை தலைவைத்து படுக்கவில்லை.

ஒருநாள் மனதில் இருக்கும் கிரிக்கெட் மிருகம் விழித்துக் கொள்ள, மீண்டும் மைதானம் சென்றேன், அங்கே ரவிகுமார் அண்ணனை பார்த்து, உலகில் இருக்கும் அத்தனை கெட்டவார்த்தைகளையும் மனதுக்குள் திட்டி தீர்த்துக் கொண்டேன், பின்ன, நேரில் திட்டி, அடுத்து மண்டையை உடைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை.

அதன் பின்பு நான் கால்காப்பு இருந்தாலும், இல்லை என்றாலும் ஒவ்வொரு பந்தையும் மிகவும் கூர்ந்து கவனமாக கவனித்து, அவசரப்படாமல் விளையாடத் தொடங்கினேன், குறிப்பாக ரவிகுமார் அண்ணன் பந்தில் மட்டும் அவுட் ஆகக்கூடாது என்ற வெறி. அந்த காலக்கட்டத்தில் ஒரு நல்ல பேட்ஸ்மேனாக என்னை தயார் செய்து கொண்டேன்.

அப்போ எங்க ஊர் மாயாண்டி சுவாமி கோயில்கொடையில் பிர்லா போஸ் அண்ணா தன் செலவில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தினார்கள். நான் ஒரு அணித்தலைவன், மூர்த்தி அண்ணா ஒரு அணித்தலைவர், அவர் அணியில் எல்லாம் நல்ல ஆட்டக்காரர்கள். என் பக்கம் எல்லாம் சின்ன பசங்க, ஆனால் நல்ல பசங்க.

1983 உலககோப்பை கபில்தேவ் அணி வென்ற மாதிரி எங்க அணி அபார வெற்றி, அதில் என்னுடைய பங்கை மறக்க முடியாது 24 ரன்கள் அதில் 4 பவுண்டரிகள். 4 ஓவர் வீசி 3 மெய்டன், 4 விக்கெட், 1 ரன். எனக்கு சிறந்த ஆட்டக்காரர் பரிசு, அது ஒரு எவர் சில்வர் தட்டு, அதை விம்பிள்டனில் கொடுப்பது போல் கொடுத்தார் பிர்லா போஸ் அண்ணா.

ரப்பர் பந்தில் எனக்கு ஆசான் பிர்லா போஸ் அண்ணா என்றால் கிரிக்கெட் பந்திற்கு ஆசான் ஜெயராஜ் அண்ணன். அவர் எங்க ஊரில் தட்டச்சு, ஜெராக்ஸ் கடை வைத்திருந்தார்கள், அவரிடம் ஆர்டர் கொடுக்க வருபவர்கள் கிரிக்கெட் மைதானம் தான் வரவேண்டும், நாள் முழுவதும் அங்கே தான் இருப்பார்.

Image hosted by Photobucket.com

எங்க பள்ளியில் எங்க வகுப்பிற்கும், சார்லஸ் (1 வருடம் சீனியர்) அணிக்கும் வெள்ளாளன் விளை சர்ச் அருகில் போட்டி நடந்தது, அதில் நான் அபாரமாக விளையாடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்து எங்க அணி வெற்றி பெற்றது, முதன் முறையாக ஊர் மக்கள் முன்னாடி விளையாடியது அதிக சந்தோசம் கொடுத்தது. சிறந்த வீரர் பரிசை ஜெயராஜ் அண்ணா கொடுத்தார்.

அதன் பின்பு எக்கச்சக்கமான போட்டிகள், சீறுடையார் புரம் என்ற ஊரில் இரண்டு இன்னிங்க்ஸ் கொண்ட போட்டியில் நாங்க முதல் இன்னிங்ஸில் 130 ரன்கள் சேர்த்தோம், எதிரணி முதல் இன்னிங்க்ஸில் 30க்கும் குறைவு, இரண்டாவது இன்னிங்க்ஸில் 50 ரன்கள் வரை எடுத்து ஆட்டம் இழந்தது, அந்த போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்கள் கிடைத்தது, மொத்தம் 15 விக்கெட்கள் மேல், அதை எங்க பள்ளிப் பருவ சாதனையாக இருந்தது.

நாங்க எங்க ஊர் மட்டுமல்லாது பக்கத்து ஊரில் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமதான் விழாக் காலத்தில் நடக்கும் போட்டிகளில் கலந்துக் கொண்டோம். அப்படி அடுத்த ஊரில் போய் விளையாடுவது திரில்லாக இருக்கும். திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், நாசரேத், ஆலந்தலை, உடன்குடி, திசையன்விளை, சாத்தான் குளம், தூத்துக்குடி, காயல்பட்டிணம் இப்படி சுற்று வட்டாரத்தில் அனைத்து ஊர்களுக்கும் போய் விளையாடி இருக்கிறேன். பஸ்ஸில் டிக்கெட் எடுக்காமல் போய் வந்த கதையை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(நினைவலைகள் ஓய்வதில்லை ….)

என் நினைவலைகள் – கிரிக்கெட்

என் நினைவலைகள் – கிரிக்கெட்


கிரிக்கெட் என்னை உயர்த்தியது எவ்வளவோ அதை விட பல மடங்கு கீழே தள்ளியது, ஆனாலும் என்னால் கிரிக்கெட்டை விட முடியவில்லை, அது இரத்தத்தில் ஊறி போயிட்டுது.

Image hosted by Photobucket.com
6ம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என்று தெரியாது. முதன் முதலில் கிரிக்கெட்டைப் பற்றி மற்றவர் பேசக் கேட்டது எப்போ என்றால் நம்ம முன்னாள் கேப்டன் மொகமது அசாருதீன் அவர்கள், தான் அறிமுகம் ஆன முதல் மூன்று டெஸ்ட்களில் சதம் அடித்து உலக சாதனை படைத்தது தான்.

அப்போ எங்க பஜார் தெருவில் இருக்கும் மூர்த்தி என்ற ஒரு அண்ணன் (4 வயது மூத்தவர்) தினமலர் படித்து விட்டு “டேய், நேத்து நம்ம அசாருதீன் சென்சுரி அடித்தாண்டா” என்பார்” எனக்கு சென்சுரி, பிப்டி, ரன், விக்கெட், ரன் அவுட், இப்படி பல ஆங்கில/கிரிக்கெட் வார்த்தைகளை கற்றுக் கொடுத்த குரு அவர். தினமும் அவரை கேள்வி கேட்டு நோண்டுவேன், சில சமயம் மனுசன் வெறுத்து ஓடியே போய்விடுவார், திட்டியும் இருக்கிறார்.

Image hosted by Photobucket.com
அப்போ தான் இந்திய அணி இலங்கை சென்றது, எங்க ஊருக்கும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவையும், இலங்கையின் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையும் தெரியத் தொடங்கியது (தொலைக்காட்சி எங்க ஊரில் 3 பேர் வீட்டில் தான் இருந்தது, எங்க குவைத் சித்தப்பா, பஞ்சாயத்து தலைவர்/ தாத்தா வி.வி. பெருமாள், எங்க தெரு ராஜா அண்ணன்,

நாங்க கிரிக்கெட் பார்க்க கூடுவது பெருமாள் தாத்தா வீட்டில் தான், ஜெயக்குமார் மாமாவுக்கு கிரிக்கெட் ரொம்பவும் பிடிக்கும், நாங்க எல்லோரும் அங்கே கூடி கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்ப்போம், சில நேரங்களில் புள்ளி புள்ளியாக அடிக்கும், ஆனாலும் நாங்க ஆர்வமாக பார்த்துக் கொண்டிருப்போம். காற்று அடித்தால் தொலைக்காட்சி தொல்லைக்காட்சி ஆகிவிட்டால், உடனே வானொலியைத் தேடி ஓடுவோம், அங்கே சார் ரன் கேலியே என்பதை கேட்டது, என்னப்பா சொல்றான் என்று ஒரு பெரியவர் கேட்க, அது ஒன்னும் இல்லை, சொல்லுபவருடைய சாரங் (லுங்கி) கிழிந்து விட்டதாம் என்று கிண்டல் செய்வோம். அப்போ எல்லாம் ஹிந்தியில் பச்சாஜ், தஸ் ரன், சடுக்கா, ஓகயா என்ற வார்த்தைகளை எல்லாம் கேட்டு ஒன்றுமே புரியாமல் விழித்திருக்கிறோம், எத்தனை ரன் என்பதை புரிந்துக் கொள்ள முடியாமல் தத்தளித்ததை நினைத்தால் இன்றும் சிரிப்பு வரும்.

அப்போ தான் ஒரு போட்டியில் இலங்கை அணியினர் நாம் வெற்றி பெற இருந்த நிலையில் வெளிச்சம் இல்லை என்று சொல்லி போட்டியை நிறுத்த, நாங்க மொத்த சிங்களவர்களையும் திட்ட, அதை மறக்க முடியாது.

அது மாதிரி மறக்க முடியாத போட்டி கடைசி பந்தில் சேட்டனின் பந்தில் மியாண்டட் சிக்ஸர் அடிக்க, எளவு வீட்டுக்கு போய் வந்தவங்க மாதிரி நாங்க இருக்க, அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, சோறு தண்ணீ இறங்க வில்லை, இரவு முழுவதும் அழுது இருக்கிறேன். பல நாட்கள் கனவில் நான் பந்து வீசி மியாண்ட் மண்டையை உடைத்து, கடைசி பந்தில் இந்தியாவின் மானத்தை காப்பாற்றி இருக்கிறேன்.

இவ்வாறாக தொலைக்காட்சியில் பார்த்து பார்த்து கிரிக்கெட் மேல் வெறி வர, சிறுவர்கள் அனைவரும் மூர்த்தி அண்ணாவின் தலைமையில் ஒரு கிரிக்கெட் அணியை தோற்றுவித்தோம், அதுவே என் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.


ஆரம்ப காலத்தில் நாங்க தென்னை மட்டையையும், பனை மட்டையையும் அழகாக செதுக்கி மட்டை உருவாக்குவோம், தென்னை மட்டை உடனே உடைந்து விடும், அதற்காக அகலமான பனை மட்டையை தேடி அதில் அழகாக செதுக்கி, அதற்கு சைக்கிள் டயரை குட்டி குட்டியாக வெட்டி கைப்பிடியில் மாட்டி, அதை பெருமையாக (எமனின் கதை மாதிரி) தோளில் தூக்கி அழைவதில் தனி மகிழ்ச்சி கிடைத்தது.

அப்புறம் வசதி படைத்த பசங்க பைசா கொடுக்க ரப்பர் பந்து வாங்குவோம், சில பந்துகள் பல மாதங்கள் எங்க மரண அடி தாங்கும், சில பந்துகள் ஒரே அடியில் கைலாய மோட்சம் அடையும், அதற்கு துக்கம் தெரிவித்து நாங்க அழுததை நினைத்தால் சிரிப்பு தான் வரும். அந்த பந்தை வாங்கி வந்தவனின் முதுகில் டின் கட்டி விடுவோம். அதன் பின்பு நான் தான் பர்சேசிங் மேனேஜர், எங்க மாமா கடைக்கு போய் கேரண்டி, வாரண்டி எல்லாம் கேட்டு வாங்கி, ஒரு பந்து வாங்க கடையில் இருக்கும் அத்தனை பந்தையும் தரையில் தூக்கிப் போட்டு, நல்ல பந்தை கண்டுபிடித்து வாங்கி வருவேன்.

அப்போ தான் சென்னையில் இருந்து வந்த ஒரு நண்பன் சொன்னான், ரப்பர் பந்து வாங்கியதும் அதில் ஊசி வைத்து ஒரு சின்ன துளை போட்டு விட்டால் பந்து என்ன அடி அடித்தாலும் தாங்கும் என்று சொல்ல, அவனை நாங்க கடவுள் மாதிரி பார்த்தோம்.

Image hosted by Photobucket.com
பந்து கிடைக்காத நேரத்தில் கொமட்டிக்காய், பனங்கொட்டை, தென்னங்குறும்பல், சைக்கிள் டயர் ரப்பரை வளையம் வளையமாக வெட்டி தயாரித்த பந்து இப்படியாக கையில் கிடைத்ததை எல்லாம் பந்தாக உபயோகிப்போம்.

நாங்க கிரிக்கெட் ஆரம்பித்த சில காலத்தில் எங்க ஊரில் நிறைய தெருக்களில் ஆரம்பித்து விட்டார்கள், தெக்குத்தெரு, வடக்குத்தெரு, கீழத்தெரு, பள்ளிவாசல் தெரு, இப்படி நிறைய அணிகள்.

அதே நேரத்தில் எங்க அணியிலும் போட்டி, பொறாமைக் காரணமாக பல அணிகள் (குறைந்தப்பட்டம் 2 பேர்) தொடங்கி விட்டார்கள், பைசா இருப்பவன் எல்லாம் தலைவன், அவன் தானே பந்து வாங்கி வருவான் அதான்.,

Image hosted by Photobucket.com
மூர்த்தி அண்ணா டீம், போஸ் அண்ணா டீம், தெக்குத்தெரு டீம் எல்லாம் புகழ்பெற்றவை. ஆரம்பத்தில் என்னை எல்லோரும் பந்து பொறுக்கத் தான் அழைப்பார்கள். அத்தனை திறமையாக விளையாடத் தெரியாது. எல்லோரும் அவுட் ஆனதும் டவுட்டாகவே என்னை பேட்டிங்க் செய்ய அனுப்புவார்கள். எனக்கு ப்ரண்ட் புட், பேக் புட், ஹீக்சாட், கவர் டிரைவ் என்று ஒன்றும் கிடையாது, கண்ணை மூடிக் கொண்டு ஒரு சுத்து, பந்து மட்டையில் பட்டதா அல்லது கட்டையில் பட்டதா என்பது கண்ணை திறந்தால் தான் தெரியும், சில சமயம் சுத்துத சுத்தில் கட்டையில் விழுந்து அவுட் ஆகி இருக்கிறேன்.

Image hosted by Photobucket.com
எங்க ஊரில் கிரிக்கெட் பிரபலம் ஆக ஆக,நிறைய ஆட்டக்காரர்கள், திறமையானவர்களுக்கு மட்டுமே அணியில் இடம் (செலக்சன் கமிட்டியில் பைசா உள்ளவனுக்கும், சொந்த மட்டை வைத்தவனுக்கும் இடம்), என்பதால் நான் வெளியே உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பேன், எவனுக்காவது அடி பட்டால் எனக்கு மகிழ்ச்சி பொங்கும், இடமும் கிடைக்கும். மட்டை அடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும் பீல்டிங்கில் ஓடியாடி பந்தை தடுத்து மகிழ்வேன். சில நேரங்களில் அதற்கு கூட எப்போ அழைப்பார்கள் என்று இளவு காத்த கிளி மாதிரி காத்திருப்பேன்.


அப்புறம் கொஞ்ச நாளிலேயே என்னை விட சின்னப் பையன் எல்லாம் தன் திறமையால் அணியில் இடம் பிடிக்க, எனக்கு பொறாமை பிடிக்கத் தொடங்கியது. எனக்குள் வெறி எப்படியும் நாமும் நன்றாக ஆடி அணியில் இடம் பிடிக்க வேண்டும், அதற்காக எங்க வீட்டு தோட்டத்தில் ஒரு குரும்பலை கையில் எடுத்து தூக்கிப் போட்டு, அதை உடனே தென்னம்மட்டையால் ஓங்கி அடிப்பேன், நான் அடிப்பது எல்லாம் மட்டையில் படும் வரை தொடர்ந்து அடித்து பழகிக் கொண்டேன், சில நேரங்களில் தோட்டத்தில் வேலை செய்பவர்கள் மேலே பட, அதை அறிந்த என் அம்மா என்னை போட்டு சாத்த, இப்படியாக பேட்டிங்கை நான் கற்றுக் கொண்டேன், கொஞ்ச நாளில் பணம் சேர்த்து வைத்து ஒரு பந்தை வாங்கி, யாருக்கும் தெரியாமல் எங்க வீட்டு சுவற்றில் அடித்து அடித்து பேட்டிங்க் பழகினேன். அப்படி விளையாடும் போது தான் முன்னால், பின்னால் சென்று ஆடும் திறமையை வளர்க்க முடிந்தது (வீட்டில் பல்ப் உடைத்து, உதை வாங்கியது தனிக்கதை).

Image hosted by Photobucket.com
ஒருவழியாக எனக்கும் பேட்டிங்க் தெரியும் என்று நம்பி என்னை அணியில் சேர்த்தார்கள், மேலும் பீல்டிங் நன்றாக செய்வேன். அப்படி அணியில் இடம் பிடித்தும், எனக்கு பேட்டிங்க் என்னவோ கடைசியில் தான் கிடைக்கும், ஊரில் மட்டையை சுத்துபவங்க எல்லாம் பேட்ஸ்மேன் என்பதால் பவுலிங்கில் ஆள் குறைவாக இருக்க நான் பவுலிங்க் போட ஆசைப்பட்டேன். அப்போ தான் பேட்டிங்க், பீல்டிங்க், பவுலிங்க் என்று தொடர்ந்து ஏதாவது செய்ய முடியும் என்ற ஆசை, மேலும் எனக்கு மானசீக குருவாக எல்லாத்தும் மேலாக கிரிக்கெட் இறைவனாக கபில்தேவ் அவர்களை மனதில் நிறுத்திக் கொண்டேன், பெயரில் கூட கபில் என்பதை சேர்த்துக் கொண்டேன், பள்ளி தேர்வில் என் பெயரோடு கபில் பெயரை எழுதி ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு. வீடு முழுவதும் கபில்தேவ் படங்களாக மாட்டி வைத்திருப்பேன். இன்றும் கபில்தேவ் என்னோடு இருக்கிறார்.

Image hosted by Photobucket.com

இனிமேல் சிறப்பான பெயரையும் அணி நம்மைத் தேடி வரவும் ஆல்ரவுண்டர் ஆவது தான் சிறந்தது என்று பவுலிங்க் போடத் தொடங்கினேன் கொண்டேன். அங்கே தான் என் போராட்டம், நம்பிக்கை, வெற்றி எல்லாமே தொடங்கியது.

(நினைவலைகள் ஓய்வதில்லை ….)