Monday, November 14, 2005

அழகிய தேவதையின் வருகை

அன்பு தம்பி பாஸிடிவ் ராமா அவர்களுக்கு இறைவனின் அருளால் அழகான குட்டி தேவதை பரிசாக கிடைத்திருக்கிறார்.

அனைவரும் வாழ்த்துவோம். குட்டி தேவதைக்கும் வாழ்த்துகள் கூறுவோம்.

தொலைபேசியில் வாழ்த்துக்கள் கூற தொலைபேசி எண் 9841422739.

- மகிழ்ச்சியுடன் பரஞ்சோதி

நினைவலைகள் - குழந்தைகள் தினம்

எனக்கு சின்ன வயதிலிருந்தே குழந்தைகள் என்றால் உயிர். சின்னக் குழந்தைகளோடு விளையாடுவது, பேசுவது, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிப்பது எனக்கு மிக மிக பிடித்த விசயங்கள்.

எங்க தெருவில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் தினமும் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். இரவில் அவர்களுக்கு என் அம்மா கதை சொல்வதை வழக்கமாக வைத்திருந்தாங்க. எங்க உறவினரது குழந்தைகள் எங்க வீட்டிற்கு வந்தால் என்னை விட்டு போக மாட்டாங்க, அந்த அளவுக்கு குழந்தைகளோடு ஒன்றிப் போய் விடுவேன்.

பள்ளியில் 4வது படிக்கும் போது என் சித்தப்பாவின் மகள் மலர்விழி எனக்கு மிகவும் பிடிக்கும், பெரிய கண்கள் அவருக்கு, அவர் பேசும் அழகே தனி. தினமும் நான் அவரோடு போய் விளையாடுவேன், தெருவில் கொண்டு வந்து அனைத்தும் சுட்டிக் காட்டுவேன். பள்ளி விட்டு வரும் வழியிலேயே அவர் என்னைப் பார்த்து விளையாட அழைப்பார். என் வாழ்வில் முதன் முதலில் சிறு குழந்தைக்கு அடிமையானது என் தங்கை மலர்விழிக்கு தான்.

அதன் பின்னர் எங்க தூத்துக்குடியில் அருகில் இருக்கும் மாப்பிள்ளையூரணியில் எங்க மாமாவின் மகன் பழனி, ஆகா, என்ன அழகான குழந்தை தெரியுமா? அதுவும், என் மாமா, அத்தை திருமணம் ஆகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறந்த குழந்தை. பழனியை யாரும் தரையில் விட மாட்டார்கள், என் பெரியமாமா, சின்னமாமா ஆகியோரின் பிள்ளைகளுக்கு பழனி என்றால் உயிர், அவர்கள் எல்லோரும் 15, 20 வயதை தாண்டியவர்கள். வாரம் ஒரு முறையாவது புகைப்படம் எடுப்பார்கள், அப்படி 500க்கும் மேல் புகைப்படம் எடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் விடுமுறைக்கு சென்றால் பழனியுடன் தான் விளையாடுவேன். அவரது சின்ன வயது உருவம் இன்னமும் நினைவில் இருக்குது. இப்போ ஊருக்கு சென்ற போது அவர் கல்லூரியில் படிப்பதாக சொன்னார். சின்ன வயது சிரிப்பை நான் மீண்டும் பழனியிடம் கண்டேன். பெரிய மனிதனாக எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க போனதை நினைத்து சிரித்தேன், மகிழ்ந்தேன்.

அடுத்து என் மற்றோரு சித்தப்பாவின் மகள் திவ்யா, திவ்யா சின்ன வயதில் கொழு கொழு என்று குண்டாக இருப்பார், விரல் பட்டாலே சிவந்து அளவிற்கு அழகான குழந்தை, அவரை தூக்கி வைத்திருப்பது மிகவும் கடினம் என்பதால் அதிக நேரம் யாரும் அவரை தூக்கி வைத்திருக்க மாட்டாங்க. அதுவே எனக்கு நல்ல வாய்ப்பு, அடிக்கடி திவ்யாவை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விடுவேன், என்னைப் பார்த்தாலே அவருக்கு குஷியாகி விடும், அப்படியே தூக்கியவுடன் என்னைப் பார்த்து, வீட்டை விட்டு வெளியே கொண்டு போகச் சைகையால் காட்டுவார். நல்லா ஊர் சுத்திக் காட்டுவேன். ஆடு, மாடு, கோழி எல்லாம் காட்டினால் ரொம்பவும் மகிழ்வார். அவர் கொஞ்ச நாளில் குவைத் வந்து விட்டார்.

அடுத்தது என் அண்ணன் மகள் திவ்யா, இரண்டு திவ்யாவிற்கும் ஒரு மாத காலமே வித்தியாசம். நான் என் உயர்நிலை பள்ளிப் படிப்பு முடித்து, சென்னையில் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து கணினி பாடம் படித்தேன், அப்போ திவ்யாவிற்கு 2 வயது இருக்கும். இரண்டு திவ்யாவும் பார்க்க ஒரே மாதிரி அழகான பொம்மைகள் மாதிரி இருப்பாங்க. காலையில் திவ்யா எழுந்தது முதல் சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது, அழுவது, சிரிப்பது எல்லாமே என்னுடன் தான். நாங்க இருவரும் சண்டையும் போடுவோம். திவ்யாவுக்கு விளையாட, பேச, எல்லாமே நான் கற்றுக் கொடுத்தேன். பள்ளியில் படிக்கும் அவர் என்னமும் எனக்கு அவர் சின்னக்குழந்தைப் போல் தான் தெரிகிறார்.

அடுத்தது கீர்த்தனா, திவ்யாவின் தங்கை, அவர் பிறந்த சில மாதங்களில் குவைத் வந்து விட்டேன். கீர்த்தனா 3 மாதக்குழந்தையாக இருக்கும் போது மிகவும் அழகாக கெக் கெக் என்று சிரிப்பார். எனக்கு இன்னமும் அந்த சிரிப்பு நினைவில் இருக்குது. மனக்கஷ்டம் உண்டாகும் போது எல்லாம் கீர்த்தனாவின் சிரிப்பை மனதில் கொண்டு வந்து நிறுத்தி, என் மனநிலையை மாற்றிக் கொள்வேன்.

குவைத் வந்தப் பின்னர் தங்கை திவ்யா, தம்பி கௌதம், மற்றொரு சித்தப்பாவின் மகள் அகல்யா, சித்தப்பாவின் நண்பர்களின் குழந்தைகள் எல்லாம் சேர்ந்து ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். வாரந்தோறும் அவர்கள் வீட்டிற்கு நான் கண்டிப்பாக போக வேண்டும் என்று அன்புக்கட்டளை. நல்ல வெயில் காலத்தில் இரவில் கடற்கரைக்கு சென்று விளையாடுவோம், விடுமுறை நாட்களில் பூங்கா, மற்றும் பல இடங்களுக்கு சென்று விளையாடுவோம். அவர்கள் எங்கே சென்றாலும் முதலில் நான் வருவேனா என்பதை கேட்டு வைத்துக் கொள்வார்கள். அவர்களுக்காக என் கிரிக்கெட் போட்டிகளை விட்டுக் கொடுத்ததுண்டு.

சில ஆண்டுகளில் திவ்யா முதற்கொண்டு குழந்தைகள் பெரிய குழந்தைகளாக, கையில் வைத்து கொஞ்சும் அளவுக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் எனக்கு கிடைக்கவில்லை, அப்போ என் நண்பரின் குழந்தை ஜனனி குவைத் வந்தார். அப்புறம் தமிழ்மன்றத்தின் நண்பர்களின் குழந்தைகளை நான் கடிதங்களில், நான் சொல்லும் கதைகளில் கொஞ்சி மகிழ்ந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள் வீட்டில் கணினி பிரச்சனை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரச்சனை என்றால் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள், வீட்டிற்கு வரச் சொல்லுவார்கள், அங்கே குழந்தைகள் இருந்தால் கண்டிப்பாக போவேன், இல்லை என்றால் நல்ல சாப்பாடு கிடைக்கும் என்றால் மட்டுமே போவேன்.

கடந்த சில ஆண்டுகளாக கைக்குழந்தையாக யாருமே கிடைக்காத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்றிருந்த நான், என் அம்மாவிடம் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்தேன் ))).

திருமணம் ஆகி என் மனைவியிடம் என்ன வேண்டும் என்று கேட்டால், அவர் கேட்டது ஒன்றே ஒன்று தான். நமக்கு பெண் குழந்தை பிறந்தால் பெயர் சக்தி என்றே வைக்க வேண்டும். நான் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். எனக்கு கொஞ்சி விளையாட குழந்தை கிடைத்தால் போதும், பெயர் முக்கியமில்லை என்ற எண்ணம்.

திருமணம் ஆகி குவைத்திற்கு என் மனைவியை அழைத்து வந்த போது எங்க அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர் ராஜேஷ் அவர்களின் குழந்தை அரவிந்த் அறிமுகம் ஆனார். ஒரு நாள் என் மனைவி சொன்னார் “முதல் தளத்தில் இரண்டு தமிழ் குடும்பங்கள் இருக்கின்றன, அவர்களை போய் சந்தித்தேன். ஒரு வீட்டில் மிக அழகான ஆண் குழந்தை இருக்கிறது, பெயர் அரவிந்த், 4 மாதக்குழந்தை, கண்கள் பெரிய கண்கள். குட்டி கிருஷ்ணன் மாதிரி இருக்கிறான் என்றார். நான் உடனே போய் அந்த குழந்தையை எப்படியாவது நம்ம வீட்டிற்கு கொண்டு வா, என்று அனுப்பி வைத்தேன். சிறிது நேரத்தில் என் மனைவி அரவிந்தோடு வந்தார். ஆகா என்ன அழகான குழந்தை, நிறைய முடிகள், குட்டி கிருஷ்ணன் மாதிரி ஒரு சடை, பெரிய கண்கள், காலில் கொலுசுகள், அழகான சிரிப்பு. நான் மயங்கியே போய் விட்டேன். நான் அரவிந்தை தூக்கி, முத்தமிட்டு மகிழ்ந்தேன். அன்று முதல் நான் அலுவலகம் போய் திரும்பியதும் அரவிந்த் எங்க வீட்டிற்கு வந்து விடுவார். அரவிந்திற்கு அழவே தெரியாது, எப்போவும் சிரிப்பு தான். கிள்ளி விட்டாலும் அழமாட்டார்.

கடந்த ஒரு ஆண்டாக எங்க வீட்டு பிள்ளையாக இருந்த அரவிந்த் தற்போது இந்தியாவில் இருக்கிறார். அவரது அப்பாவுக்கு ஓமனில் வேலை கிடைத்து மாற்றம் ஆகி போயிட்டார். ஆனாலும் அரவிந்த் இன்னமும் என் மனதில் அதே புன்னகையோடு இருக்கிறார்.

குவைத்தில் எனக்கு மேலும் குழந்தைகள் அறிமுகம் ஆனார்கள், என் நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி மாதம் இருமுறை குழந்தைகளுக்கு கதைகள் சொல்வது, விளையாட்டு, நல்ல பழக்கவழக்கங்கள் சொல்லிக் கொடுப்பது என்று தீர்மானித்தோம், அதையும் செய்து வந்தோம்.

இப்போ கூட தெருவில், பிரயாணம், ஷாப்பிங்க் செண்டரில் என் முன்னால் இருக்கும் குழந்தைகளை வேடிக்கை விளையாட்டு காட்டி, என்னைப் பார்த்து சிரிக்க வைப்பேன். சில குழந்தைகள் அப்பா, அம்மா பேச்சை கேட்காமல் அடம்பிடித்தால் பெற்றோருக்கு தெரியாமல் பயமும் காட்டுவேன். அவர்கள் பயந்து போய் பெற்றோர் சொல்படி கேட்பார்கள்.

என் மனைவியிடம் எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்றேன், அவருக்கும் பெண் குழந்தை தான் இஷ்டம், எங்க இருவரின் விருப்பம் போல் என் மகள் சக்தி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13ந்தேதி பிறந்தார்.

சக்தி என்று சொல்லும் போது மனதில் உற்சாகம் ஒட்டிக் கொள்ளும், தொடர்ந்து இரண்டு மூன்று முறை அழுத்தமாக சொல்லிப் பாருங்க, உங்களுக்குள் புத்துணர்ச்சி உண்டாகும். அது தான் இந்த பெயரில் இருக்கும் மகத்தான சக்தி.

ஆகா என் மகள் சக்தியைப் பற்றி சொல்ல ஒரு வலைத்தளம் போதாது, அத்தனை தகவல்கள் இருக்கின்றன.

ஏற்கனவே குழந்தைகளுக்காக சிறுவர் பூங்கா வலைப்பூ தொடங்கி, அதில் நிறைய கதைகள் சொல்லியிருக்கிறேன். சக்தி புராணம், இது என் மகள் சக்திக்காக தொடங்க இருக்கும் வலைப்பூ. என் மகள் பற்றிய அனைத்து தகவல்களையும் இங்கே சேமிக்க இருக்கிறேன். அவர் தமிழிலில் எழுத, படிக்க தொடங்கும் காலத்தில் அவரே தகவல்கள் கொடுப்பார்.

தற்போது குழந்தைகள் சந்தோஷ், ஸ்மையா, அருண் பாலாஜி, சக்தி ஆகியோர் எங்க வீட்டில் கொட்டம் அடிக்கிறார்கள். கிரிக்கெட் விளையாட செல்லுமிடத்தில் இலங்கை நண்பர்களின் குழந்தைகள் வருவார்கள், அவர்களுக்கென்று சாக்லெட் எடுத்து செல்வது வழக்கமாக வைத்திருக்கிறேன்.

நான் பொதுவாக புதிய நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் அவர்கள் குழந்தைகளை உடனே தூக்க மாட்டேன், ஏன் என்றால் அவர்கள் அழத் தொடங்கி விடுவார்கள், பின்னர் என்ன செய்தாலும் நம்மிடம் ஒட்ட மாட்டார்கள். குழந்தைகளை முதலில் கண்டுக்கொள்ளவே கூடாது. நாம் அமைதியாக இருக்க வேண்டும், அல்லது குழந்தைகளின் பெற்றோரிடம் சிரித்து பேச வேண்டும். அவ்வாறு செய்வதால் குழந்தைகளை கொஞ்சம் கவர முடியும், சிறிது நேரம் சென்றப்பின்னர் குழந்தைகளைப் பார்த்து சமிக்கை செய்து, சிரிப்புண்டாக்க வேண்டும், பின்னர் நம் கையில் இருக்கும் தொலைபேசி, பென் போன்றவற்றை அவர்களிடம் கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதால் அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். இவ்வளவு செய்தும் வரவில்லை என்றால் இன்னமும் பொறுமை காக்க வேண்டும்.

அப்புறமாக கொடுத்து வாங்குவது போல் விளையாட வேண்டும், பின்னர் கழுத்து பக்கத்தில் கிச்சு முச்சு காட்ட வேண்டும், அதன் பின்னர் தான் கையில் தூக்க வேண்டும், தூக்கியது முத்தம் கொடுக்கக்கூடாது, மீசை உள்ளவர்கள், சிகரெடி பிடிப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தூக்கி விசிறி, போட்டோகள், அல்லது வேற பொருட்களை தொட அவர்களை தூக்கி காட்டவேண்டும். அல்லது வீட்டின் உள்ளேயே அங்கே இங்கே நடக்க வேண்டும், அப்போ தான் குழந்தைகள் நம்மை கட்டி பிடித்துக் கொள்வார்கள். அவ்வளவு தான், அதன் பின்னர் நீங்க குழந்தைகளை கீழே விட்டாலும் இறங்க அடம் பிடிப்பார்கள். வீட்டிற்கு கிளம்பினால் அழத் தொடங்குவார்கள். அதுவே நீங்க குழந்தையின் மனதை கொள்ளை அடித்ததற்கு அடையாளம்.

மேலும் குழந்தைகளோடு இருக்கும் போது குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப நாமும் நடக்க வேண்டும், தரையில் குழந்தைகள் உருண்டால், நாமும் உருள வேண்டும். ஓடி விளையாடினால், நாமும் ஓட வேண்டும்.

அடுத்த முறை நீங்களும் இதையே செய்து, குழந்தைகளின் மனதை கொள்ளை கொள்க.

அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்.

கடைசி செய்தி: எங்க திருமண நாள், அது குழந்தைகள் தினமான இன்று தான். மேலும் எங்க திருமணம் நடந்த திருமண மண்டபத்தின் பெயர் சக்தி திருமண மஹால்.