Tuesday, June 13, 2006

வேட்டையாடு விளையாடு - வெள்ளெலி


நான் மொதல்ல புட்டான் புடிக்கிறதையும், அப்புறம் கருந்தேள் பிடிக்கிறதையும் சொல்லிட்டேன், அடுத்தது வெள்ளை எலி வேட்டை தான்.

வெள்ளை எலி வேட்டையில நான் அதிகம் போனதில்லை, மத்த எல்லா வேட்டையும் பகல்லன்னா, வெள்ளலி வேட்டை ராத்திரியில தான் நடக்கும், அதிலும் அமாவாசை அன்னைக்கு தான் போவாங்க. எங்க அம்மா மாலை 6 மணிக்கு மேலே வெளியே போக அனுமதி கொடுக்க மாட்டாங்க, அதனால அடிக்கடி போகும் வாய்ப்பு கிடைக்கல, ஒரே ஒரு தடவை தான் போனேன், அதுவும் மாயாண்டி சுவாமி கோவில்கொடை அப்போதான், ஆனால் எங்க கூட்டாளிங்க அவங்க எலி புடிச்சதை கதையா சொல்லுவாங்களா, அதையும் சேர்த்து சொல்லுறேன்.

எங்க கிராமத்திலே அங்கே அங்கே வயலும், நிலக்கடலையும், வாழையும், தென்னந்தோப்புமா இருக்கும். ஒவ்வொருத்தர் வீட்டுக்கு பின்னாலேயும் கொறஞ்சது 10 தென்னமரமாவது இருக்கும்.

அப்படி அருமையான கிராமம், தோட்டத்தில வேலியோரமா பெரிய பெரிய பொந்துங்க இருக்கும். நாங்க கிரிக்கெட் ஆடும் போது செல சமயம் பந்து பொந்துக்குள்ள போயிடும், அப்போ நான் கையை விட்டு எடுக்க பயப்படுவேன், ஏலே! பாம்பு கீம்பு இருக்கும்லே” என்பேன்.

அப்போ என் நண்பர்கள் சொல்லுவாங்க, “ஏலே! அது பாம்பு பொந்துல்ல அது வெள்ளலி பொந்து, பாம்பா இருந்தா அதன் தடம் தெரியுமுல்ல” என்பாங்க. இருந்தாலும் நான் அந்த பக்கம் போகமாட்டேன்.

தைரியமான பசங்க போயி எடுத்துட்டு வருவாங்க, நான் அவங்க கிட்ட ஆமா எப்படி இதை வெள்ளெலி பொந்துன்னு சொன்னேன்னு கேட்டா, அதுவா! வெள்ளெலி கூட்டமா தான் இருக்கும், அதுவும் ஒரு பொந்து வழியா மட்டும் போகாது, சுத்தி சுத்தி பொந்தடிச்சி இருக்கும், ஒவ்வொரு 10 மீட்டர் தூரத்திலும் பொந்து இருக்கும், எல்லாம் பொந்தும் இணைஞ்சி இருக்கும், ஆபத்துன்னா பல பொந்து வழியாக எல்லா எலிகளும் தப்பிச்சி ஓடுமுன்னு எங்க கூட்டாளிங்க சொன்னாங்க.

நானும் அப்படியான்னு கேட்டுட்டு விட்டுட்டேன். ஒரு நாள் மாலையில் கிரிக்கெட் ஆடிட்டு வரும் போது, எங்க கூட்டாளிங்க, குசுகுசுன்னு பேசிட்டாங்க, என்னான்னு கேட்டதுக்கு, “இன்னைக்கு அமாவாசை ராத்திரி, வெள்ளெலி புடிக்க போடுறோம், வெற்றிவேல் அஞ்சாறு இரும்பு கம்பி தயார் செய்துட்டான், சுதாகர் அண்ணா 5 கட்டை டார்ச் லைட் கொண்டு வருவாங்க, முருகன் மசாலா, உப்பு எல்லாம் கொண்டு வருவான், நீயும் வாரியா?”

ஆறு மணிக்கு மேலே வீட்டட விட்டு வெளியே போகவோ, வெளியிலிருந்து பிந்தி வருவோ அம்மா அனுமதிப்பதே கிடையாது, இந்நிலையில் எப்படி போவது, என்னால் முடியாதுப்பான்னுட்டேன். முருகனும் ஆமாம், அவன் வரவேண்டாம், அவங்க அம்மா அவனை மட்டுமல்ல, நம்ம தோலை கூட உரிச்சிப்புடுவாங்கன்னு பயம் காட்டினான்.

வீட்டுக்கு வந்து என்னால எலி புடிக்க போகமுடியலைன்ன வருத்தமாக இருந்தது, ஆனாலும் அம்மாவின் ஆணையை மீற முடியதே. ஏதாவது பொய்யை சொல்லிட்டு போகலாமான்னு யோசித்தேன், ஒன்றுமே புலப்படலை, புலம்பிக்கொண்டே படுத்துட்டேன்.

அடுத்த நாள் விடியற்காலையிலேயே வழக்கம் போல் ஊற வச்ச பச்சை கடலையை துன்னுட்டு ஓட்டம் ஓடி, உடற்பயிற்சி செய்ய கிளம்பி போனேன், அங்கே போனால் முருகன், முத்து, வெற்றி எல்லாம் அங்கே படுத்துகிடந்தாங்க. நான் எழுப்பி, என்ன வீட்டுக்கு போகலையான்னு கேட்டதற்கு “செகண்ட் ஷோ சினிமா பார்த்து, அதன் பின்னர் ராத்திரி முழுவதும், வெள்ளெலி புடிச்சும், திருட்டுத்தனமாக எளநீ களவாடியும் வர நேரம் ஆயிட்டுதாம், அதான் இங்கேயே படுத்துட்டோம்”

அடப்பாவிங்களா! ராத்திரி பூரா வீட்டுக்க்கு போலையா, நல்லவேளை நான் இவன்க கூட போகலை, இல்லேன்னா அம்மா ராத்திரி பூரா என்னை காணம எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்க, காலையில் வீட்டுக்கு போனால் தோலை உரிச்சிருப்பாங்க. சித்தப்பாகிட்ட சொல்லி இருப்பாங்க, அவங்க வேறு கன்னாபின்னான்னு திட்டியிருப்பாங்க, முருகா என்னை காப்பாதிட்டன்னு திருச்செந்தூர் முருகனை வேண்டிக்கிட்டேன்.

வெற்றி சொன்னான், உன் பங்கை எடுத்து வைச்சிருக்கோம், எடுத்துக்கோன்னு சொன்னான். எனக்கு சாப்பிட மனசு இல்லை, எலியை போய் சாப்பிடுவதா என்று மூஞ்சியை சுளித்தேன்.

உடனே முத்து சொன்னான் “அண்ணே! வீட்டிலே கோழி கண்டதையும் தின்னுது, அதையே சாப்பிடுறீங்க, வெள்ளெலி கண்டதையும் சாப்பிடாது, நெல்லு, பயிரு, கடலை தான் சாப்பிடும்”.

நான் எப்போவும் கொஞ்ச பந்தா, ஈகோ, வித்தியாசமானவன்னு காட்டிக்குவேன், கடைசி வரை நான் எலி வறுவலை சாப்பிடவில்லை. ஆனாலும் வெள்ளெலி பிடிக்கும் மொறையை பார்க்க ஆசை இருந்தது.

ஒருவழியா மாயாண்டி சுவாமி கோவிலில் கொடை வந்தது. வில்லுப்பாட்டுன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், கதை சொல்லுவாங்க தானே, ஆனா எங்க கேங்குக்கு பிடிக்காது. அன்னைக்கு ராத்திரி வில்லுப்பாட்டு, போன வருசம் வந்தவரையே புக் பண்ணியிருந்தாங்க, அவரும் போன வருசம் சொன்ன கதையையே சொல்லத் தொடங்கினார், எல்லோரும் கொட்டாவி விட்டோம், உடனே பசங்க அவங்களுக்குள்ள குசுகுசுன்னு பேசினாங்க, சுதாகர் அண்ணாவை போய் பார்த்தாங்க, எங்க பாஸ் அவரும் கிளம்பிட்டார், எல்லோரும் வெள்ளெலி புடிக்க கிளம்பிட்டாங்க. நானும் என் அம்மாகிட்ட ராத்திரி பூரா வில்லுப்பாட்டு கேட்டு தான் வருவேன், லேட்டாச்சின்னா கோயிலேயே படுத்துக்கிறேன்னு மொத தடவையா அனுமதி வாங்கிட்டேன்.

எனக்கு பயங்கரமான ஆர்வம், திரில், சொல்ல முடியாத சந்தோசம். போகிற வழியில் நான் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக முருகன் பதில் சொன்னான்.

எலி எப்படி பிடிப்பீங்க ?

நம்ம கையில் பெரிய கம்பி, முனை கூறாக இருக்குதே அதை வைத்து குத்தி பிடிப்போம். இல்லாட்டி சாக்கு வைச்சி பிடிப்போம்.

கம்பியை குத்துவதுக்குள்ள எலி ஓடாதா?

எலி ஓடாது, அதுக்கு தான், எலியை பார்த்ததும், டார்ச் லைட்டை அதன் கண்ணில் அடிக்கணும், எலி ஆடாம அசையாம நின்னுடும், உடனே ஒரே குத்து, குத்தி தூக்கிடுணும்.

ஒருவேளை எலி பொந்துக்குள்ள இருந்தா?

அதுக்கு தான் மம்முட்டி இருக்கே, அதை வெச்சி வெட்டி பிடிக்கணும்.

நீ தானே சொன்னே, எலி பல பொந்து வழியா ஓடுமுன்னு, அப்போ என்ன செய்வே?

அதுக்கு தான் பொந்துகிட்ட இருக்கணும் கையில் சாக்கு பை இருக்குதுல்ல, அதை வைச்சி போத்தி பிடிக்கனும்.

பாம்பு கீம்பு பொந்துல்ல இருந்தா?

முருகன் கடுப்புல “ஏலே சும்மா வாரியா, பாம்பு இருந்தா நீயே பிடி, அதான் பாக்க போறேல்ல”

அதுக்கு மேலே பேசினா, கம்பியால என்னை குத்திப்புடுவான்னு விட்டுட்டேன். நேரா எங்க பாட்டி வீட்டு தோட்ட வேலிபக்கம் போனாங்க, அங்கே நெறைய ஒட மரம் இருந்தது, முள் கால்ல ஏறினா, மூணு நாளுக்கு வலிக்கும், அதே பயத்தில் கவனமாக போனோம்.

நைசா பூனை மாதிரி நடந்தோம், அவங்க சொன்ன மாதிரியே வெள்ளெலி நடமாட்டம் இருந்துச்சு, ஆனா நேருக்கு நேரா டார்ச் அடிக்கும் நிலையில் ஒன்னும் வரலை, வந்த ஒரு எலியையும் ஒருத்தன் தும்மல் போட்டு விரட்டிட்டான்.

அப்புறம் பொறுமை இல்லாம எல்லோரும் எலிகளை வெரட்டிக்கிட்டு போனோம், ஒவ்வொன்னும் ஒவ்வொரு தெசையில ஓடி, பொந்துல போயிட்டுது. அப்புறம் என்ன முருகன், முத்து எல்லாம் ஆளுக்கு ஒரு பொந்தை தோண்டினாங்க, நாங்க ஆளுக்கு ஒரு பொந்துகிட்ட சாக்குபையை பிடிச்சிக்கிட்டு இருந்தோம், ஒன்னும் வருகிறபாடு இல்லை.

அப்புறம் வெறுத்து போய், சரி வேற பக்கம் போகலாமுன்னு போனோம், அங்கேயும் எங்க சத்தம் கேட்டு எலிகள் ஓட்டுது, உடனே பாஸ் சொன்னார் “எலி புடிக்க கூட்டம் சேர்க்ககூடாது, மூணு பேருக்கு மேல போன இப்படி ஆகும்”

நான் மட்டுமல்ல, ஊருக்கு கோவில்கொடைக்கு வந்த பட்டினத்து பசங்க வேற வர, ஒரே திருவிழா கோஷ்டி மாதிரி தான் எலி புடிக்க போனோம்.

அப்புறம் முருகன் ஒரு பொந்தை தோண்ட நாங்க ஆவலோடு பார்த்துட்டு இருந்தோமா, சடார்ன்னு உள்ளே இருந்து ஒரு பாம்பு எங்களுக்கு பயந்து எங்க காலுக்குள்ள ஓட, நாங்க அதுக்கு பயந்து அலறி அடிச்சிட்டு ஓட, கோஷ்டி கும்பல் எல்லாமே எலிகளை விட அதிக திசைகளில் ஓடிட்டாங்க, நானும் பயந்து முள் செடி எல்லாம் தாண்டி ஒரே ஓட்டமாக ஓடி, ரோட்டுக்கு வந்துட்டேன், கை, கால், முட்டி, எல்லாம் முள் கிழித்து ரத்தம் வந்தது, நல்லவேளை பாம்பு கடிக்கலைன்னு மனசை தேத்திக்கிட்டு கோயிலுக்கு வந்தேன். அங்கே எனக்கு முன்னாடியே பல பயலுக்கு வந்துட்டாங்க. எங்க பாஸ், சுதாகர் அண்ணா, முருகன் மூணு பேர் மட்டும் வரலை.

கொஞ்ச நேரத்தில மூணு பேரும் வந்தாங்க, எலே! கோயிலுக்கு பின்னாடி வாங்கலே! எளநீ வெட்டி வந்திருக்கோம், சாப்பிடலாமுன்னு கூட்டிட்டு போனாங்க. நாங்க ஓடி வந்த பின்னாடி அவங்க ஒரு தோப்புல நொழஞ்சி எளநீ வெட்டிட்டு வந்துட்டாங்க, நாங்களும் ஜாலியா சாப்பிட்டோம்.

வெள்ளெலி வேட்டை இத்தனை கஷ்டமான்னு நினைச்சா, செல மக்க செலவே இல்லாமல் எலி புடிச்சாங்க அது எப்படின்னு அடுத்த வாட்டி சொல்லுறேன்.

Wednesday, June 07, 2006

வேட்டையாடு விளையாடு - கருந்தேள்

போன வாட்டி நான் சின்ன வயசுல தும்பி/புட்டான்/தட்டான் புடிச்ச கதையை சொன்னேன்.

வருசம் முழுவதும் தும்பி, பட்டாம் பூச்சி/வண்ணத்துப்பூச்சி பிடிக்கும் விளையாடு விளையாடுவோம்.

மழைக்காலம் வந்தால் எங்க ஊரில் பட்டுப்பூச்சின்னு ஒரு பூச்சி வரும், அய்யோ எவ்வளவு அழகாக இருக்கும் தெரியுமா? சிறிய வண்டு மாதிரி தான், ஆனால் பஞ்சு மாதிரி உடம்பு முழுவதும் பட்டு துணி/கம்பிளி போர்த்தியது போல் சிவப்பாக பளபளக்கும். கையில் எடுத்தால் கால்களை எல்லாம் மடக்கிக் கொண்டு சுருண்டு போய் அமைதியாக இருக்கும், கடிக்கவும் செய்யாது, அது எப்படி வருது, எப்படி போகுதுன்னு இதுவரை தெரியவில்லை, ஏதோ வானத்தில் மழை பெய்யும் போது விழுதுண்ணு சின்ன வயசிலே பேசிக்குவோம்.

தினமும் அதை சேகரிப்போம், ஒரே நாளில் அது மண்டையை போட்டும், பள்ளிக்கூடத்துக்கு (5வது படிக்கும் வரை) போகும் போது அதையும் கொண்டு போயிடுவோம், ஒரு பக்கம் நான் என்னுடையதை விட, அடுத்த முனையில் என் கூட்டாளி அவனது பட்டுப்பூச்சியை விட, யாருடையது முதலில் நடுமத்திசெண்டர் போகுதுன்னு பார்ப்போம்.

செல சமயம் இப்படி வெளையாட, முதுவில் டீச்சர் ஓங்கி ஒரு அறை வைப்பாங்க, அதன் பின்னரே ஆட்டம் தடை படும்.

ஒருவழியாக 6வது வகுப்பு போன போது, வாழ்க்கை பருவத்தில் அடுத்த நிலைக்கு போனமாதிரியான ஒரு எண்ணம், பெரியவங்களை பார்த்து அவங்களை மாதிரி நடக்க ஆசைப்படுதல் எல்லாமே தொடங்கியது, அப்போ தான் பட்டம் விடும் விளையாட்டு, கோலி, சோடா பாட்டில் மூடி, சிகரெட் அட்டை, பம்பரம், கபடி எல்லாம் தொடங்கியது.

அப்போ எனக்கு கூட்டாளி, குருவாக முருகன் கிடைச்சான். முருகனுக்கு என்னை விட ஒரு வயசு கூட, எங்க தெருவிலேயே 3 முருகன்கள், அதில் ஒருவரை மட்டும் அண்ணன் என்று அழைப்பேன், அவர் இப்போ இங்கே எங்க வீட்டுக்கு எதிரே தான் குடும்பத்தோடு இருக்கிறார், சக்திக்கு தினமும் விளையாட ஒரு அத்தை இருக்காங்க.

தோழன் முருகன் சரியான வால், வீட்டிலேயே இருக்கமாட்டான், எப்போ பார்த்தாலும் ஏதாவது சேட்டை செய்துகிட்டே இருப்பான், கொரங்குப்பய என்றே எல்லோரும் அவனை சொல்லுவாங்க.

ஒரு தடவ, எங்க தெருவுக்கு அடுத்த தேரிக்காட்டுக்குள்ள போய் பிள்ளையார் பந்து விளையாடினோம், ஒருத்தன் வீசின பந்து அங்கே இருந்த பாழடைந்த கெணத்துல விழுந்துட்டது, அவனை போட்டு முருகன் நல்லா சாத்திட்டான், அவனும் அழுதுட்டே இருக்க, முருகன் அவனை சமாதானம் செய்ய, “சரி சரி! நான் ஒனக்கு நட்டுவக்காலி பிடிச்சு விளையாட சொல்லித்தாரேன்னான்.

எனக்கு ஒன்னுமே புரியலை, நட்டுவக்காலியை பிடிப்பதா? அது எப்போவாவது வீட்டுக்குள்ள வீட்டுக்குள்ள வரும், எங்க கண்ணுல பட்டால் அடுத்த நிமிடமே பரலோகம் போயிடுமே. இங்கே காட்டுக்குள்ள எங்கே பிடிப்பான் என்று நெனைச்சேன்.

நெறைய கொழுஞ்சி செடி இருக்கும் இடத்துக்கு போனான், அப்படியே தரையில் ஊர்ந்து கொண்டு ஒவ்வொரு செடியின் மூட்டையும் பார்த்துக் கொண்டே போனான், ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு, ஒரு பெரிய குச்சியை கொண்டு வரச் சொன்னான். அங்கே ஒரு சின்ன பொந்து, நாலு விரல் நுழையும் அளவு துவாரம், அதில் ஒரு குச்சியை எடுத்து விட்டான். குச்சியான நன்றாக உள்ளே போனதும், மட மடவென்று மண்ணை கையால் கிண்டி, தோண்டினான், அப்புறம் ஒரு ஒடைஞ்ச மண்சட்டி ஓட்டை வைத்து வேகமாக தோண்டினான், குச்சி சென்ற அளவுக்கு தோண்டியதும், மீண்டும் குச்சியை பல திசைகளில் நுழைத்தான், ஒரு பக்கம் குச்சி விட்டதும் நுழைந்து விட்டது, முழு குச்சி நுழையும் அளவுக்கு விட்டு மீண்டும் தோண்டினான், இப்படியாக நாலு, அஞ்சு மொறை செய்த பின்பு, எல்லோரையும் தள்ளிப்போகச் சொன்னான்.

நான் 10 அடி தூரம் தள்ளி போயி நின்னுட்டேன், கையில் பெரிய கல்லை வேறு எடுத்து வைச்சிக்கிட்டேன், பாதுகாப்புக்குத்தான்.

கொஞ்ச நிமிடத்தில் மண்ணை பொழந்துக்கொண்டு பெரிய நட்டுவக்காலி (கருந்தேள்) வந்தது, அய்யோ பொட்டபுள்ளங்க எல்லாம் ஓடிட்டாங்க, நானும் 4 அடி பின்னாடி போயிட்டேன். முருகன் மட்டும் தேளை அந்த குச்சியால் நோண்டினான், அது குச்சியை படக் படக் என்று கொட்டியது. கொஞ்ச நேரம் கொட்ட வைத்த பின்பு, அந்த குச்சியால், தேளை மண்ணோடு அமுக்கி பிடிச்சிக்கிட்டு, கொடுக்கை மட்டும் ஒரு கல்லை வைத்து தட்டி எடுத்துட்டான். இப்போ பயமே இல்லைன்னு தேளை கையில் எடுத்து ஓட விட்டான், அய்யோ எனக்கு ஒடம்பு எல்லாம் புல்லரிச்சுட்டுது. பயமாக இருந்தது. அப்புறம் முருகன் அந்த தேளை எடுத்து ஒவ்வொருத்தர் மேலும் தூக்கிப் போட, நான் ஒரே ஓட்டமாக ஓடி வீட்டுக்கு வந்துட்டேன்.

அப்புறம் அடுத்த நாளும் முருகனை கூப்பிட்டுகிட்டு ஒரு பெரிய படையே கிளம்பியது, கருந்தேள் பிடிக்கத் தான்.

இந்த முறை முருகனின் மாணவன் முத்து தோண்டினான், தேள் வரும் நிலை வந்ததும், முருகன் வந்து கொடுக்கை பிடுங்கினான், அன்று நாலு, அஞ்சு தேள் பிடிச்சிட்டோம், அப்புறமா மாயாண்டி தாத்தா வீட்டு திண்ணையில் விட்டு தேள் ரேஸ் வச்சோம். அப்புறம் இரு தேள்களை கிளாடியேட்டர் ஸ்டைலில் சண்டை போட வச்சோம், அப்புறமா ஒரு தேளின் வாலில் நூலைக்கட்டி இரு பக்கமாக இழுக்க வைச்சோம், இப்படி எல்லாம் செய்து முடிக்க, எங்க தேள் விளையாட்டு எங்க அம்மாகிட்ட என் தம்பி போட்டு கொடுக்க, அம்மா வந்து நாலு சாத்து சாத்தினாங்க.

வீட்டுக்கு வந்த பின்பு எங்க அம்மா, யாரோ ஒருவரை தேள் கொட்டியதால் விஷம் ஏறி செத்து போயிட்டார், ஒருவருக்கு கை, கால் விளங்கலைன்னு கதை சொன்னாங்க. அதிலும் மஞ்ச தேள் ரொம்ப விஷமுன்னு சொன்னாங்க.

அப்புறம் எங்க அத்தை பொண்ணு, அத்தை மகன் எல்லாம் லீவுக்கு, கோயில் கொடைக்கு ஊருக்கு வந்தால், தேள் பிடிக்கும் வித்தையை காட்டி அசத்தியிருக்கிறேன்.

ஒரு நாள் அப்படி தான் வீட்டு வாசப்படி மேல சாவி இருக்கும் அதை எடுக்க கையால் தடவ, படக்குன்னு ஏதோ குத்திச்சி, வேகமாக கையை எடுத்தால் மஞ்ச தேள் ஒன்னு கீழே விழுந்தது, அவ்வளவு தான், அய்யோ அம்மான்னு கூப்பாடு போட்டு ஊரையே கூட்டிட்டேன். அம்மா அதை வெளக்குமாத்தால அடிச்சி கொன்னுட்டாங்க, எனக்கோ வலி தாங்க முடியலை, அழுது புரண்டேன். உடனே அம்மா, பக்கத்து வீட்டு சுப்பையா மாமா, கோபால் மாமா வீட்டு அத்தை என்றே தெருவே கூடிட்டது, ஆளுக்கு ஒரு வைத்தியம் சொன்னாங்க, ஏதேதோ குடிக்க சொன்னாங்க, எனக்கோ விர் விர்ன்னு வலி ஏறியது. உடனே தம்பி டாக்டர் மாமா கிட்ட போய் ஒரு ஊசி போட்டாங்க, செல மாத்திரையும் கொடுத்தாங்க, அதன் பின்னர் வலி போயிட்டது, ராத்திரி பூரா தூக்கமே இல்லை, எங்கே செத்து போயிடுவேனோன்னு, காலையில் முழித்தவுடன் தரையில் கால் படுதான்னு பார்த்தேன், நல்ல வேளை உசுரோடு தான் இருந்தேன். அதன் பின்னர் அடிக்கடி கை வலிக்கும், ஊறல் எடுக்குமா, உடனே வெஷம் இன்னமும் இருக்குது, அதை இறக்கணும், அதுக்கு மசூதியில் ஓதும் பாய் மந்திரிச்சு கொடுக்கும் தேங்காய் எண்ணேய் தேய்த்தால் போதும் என்று சொல்ல, எங்க அத்தை சீறுடையார் புரத்துக்கு கூப்பிட்டு போய் பாய்கிட்ட சொல்ல, அவரும் தேங்காய் எண்ணேயை ஓதி கொடுத்தார்.

அவர் கொடுத்த எண்ணேயை போட்டால் வலியே காணமல் போயிடும், அதன் பின்னர் அந்த எண்ணேய் யப்போ பூச்சி கடிச்சாலும் போடுவோம், உடனே சரியாயிடும்.

அதன் பின்னர் முருகன் சொன்னான், ஒரு தடவை தேள் கொட்டிட்டா, அதன் பின்னர் தேள் கொட்டினா விஷம் ஏறாதுன்னான். அதன் பின்னர் தேள் பிடிக்கும் விளையாட்டு சூடுபிடிச்சது, பாழடைந்த கெணத்துல சைடுல இருக்கும் பாறையை உயர்த்தினா செல சமயம் மஞ்ச தேள் எல்லாம் கிடைக்கும், செல சமயம் குட்டி குட்டியா தேள் குட்டிகள் ஓடும்.

கிரிக்கெட் ஆடும் போது ஒரு முறை அடிச்ச பந்து பனமரத்துக்கு அடியில போய் விழ, அங்கே போனா இரண்டு தேள் புதுசா கல்யாணம் ஆன மாதிரி இருந்தாங்க, அதை பார்த்த எங்க குரு (இவர் வேற, இவர் பெயரு அலிபாபா), அதுக்கு பெரிய கதையே சொன்னாரு, தேள்களின் காதல், கல்யாணம், ஆண் தேளின் கதி, இப்படி, இந்த கதை எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியலை.

இங்கே, குவைத்துல கூட பாலைவனத்தில கிரிக்கெட் ஆடும் போது கோழி குஞ்சு சைஸில் தேள்/நட்டுவகாலி பார்த்திருக்கிறேன். இங்கே தேளுக்கு பதில் உடும்பு பிடிச்சிருக்கிறோம்.

எல்லாம் சரி, இவ்வளவு தூரம் தேள் புராணம் பாடிட்டு, ஒரு கதை சொல்லலைன்னா என் பேரு கெட்டு போயிடாது.

எங்க பக்கத்து வீட்டுக்காரங்க எங்களுக்கு ரொம்ப தொந்தரவு கொடுப்பாங்க, அடிக்கடி பிரச்சனை வரும், அம்மா ரொம்பவே அமைதியாக இருப்பாங்க. அவங்க வீட்டு சின்ன பசங்க எங்க வீட்டுக்கு வெளையாட வந்தா, நான் வெரட்டி விடுவேன். அப்போ அப்போ கருவேப்பிலை பறிக்க வருவாங்க, நான் அம்மாகிட்ட ஏம்மா, நீங்க அவங்களை உள்ளே விடுறீங்க, அவங்க தான் நம்ம கூட சண்டை போடுறாங்க தானே என்பேன்.

அதுக்கு எங்க அம்மா சொல்லுவாங்க, அவங்க சுபவாசம் அப்படி, அதுக்கு நாம நம்மளை மாத்திக்கக்கூடாது, நாம நாமாகவே இருக்கணும்பாங்க, அப்படி சொல்லி ஒரு தேள் கதை சொன்னாங்க.

ஒருவாட்டி ஒரு சாமியார் தன் சீடர்களுடன் ஆத்துப்பக்கமா போனாராம், அங்கே ஒரு கருந்தேள் தண்ணியில் தத்தளித்து கொண்டிருந்திச்சாம், சாமியாரும் பாவமுண்ணு அதை காப்பாற்ற தன் கையால் எடுத்தாராம், எடுத்து வெளியே வருவதற்குள் தேள் கொட்டிவிட, சாமியாரும் கையை உதறிவிட்டாராம், மீண்டும் தேள் தண்ணீரில் விழுந்து தத்தளிச்சதாம், மீண்டும் கையால் பிடிச்சி தூக்கினாராம், மீண்டும் கொட்டியதாம், இப்படியாக இருக்க, அதை பார்த்த குருவின் சீடர் “சாமி! அதான் அந்த தேள் கொட்டுதே, அதை விட்டு விட்டு போகலாமே, அதை ஏன் காப்பாற்ற நினைக்கிறீங்கன்னாராம்”

அதுக்கு குரு சொன்னாராம் “சீடனே! தேளின் தன்மையானது கொட்டக்கூடியது, அதற்கு நான் காப்பற்றத் தான் கையால் பிடிக்கிறேன் என்று தெரியவில்லை, அதுக்காக நாம நம் மனிததன்மையை விட்டு விட்டு அதை தண்ணீரிலேயே விட்டு போகலாமா? தேள் தன் வேலையை செய்கிறது, நான் என் வேலையை செய்கிறேன்”.

இதை கதையாக சொன்ன அம்மா, தேள் மாதிரி தான் எல்லோரும் இருப்பாங்க, ஆனா நாம அப்படி இருக்கக்கூடாது, நம் கடமையை சரியாக செய்யணும் என்றாங்க.

எனக்கு சரியான கோபம், யார் மேல, சீடன் மேல தான். குருவை தேள் கொட்டுது, குரு தான் முட்டாத்தனமாக கையை விட்டு தேளை பிடிக்கிறார், சீடனாவது ஒரு கட்டையோ, துணியோ, வேறு எதையாவது கொடுக்கலாம் தானே, ஒரு வேளை குரு பரமார்த்த குருவா? சிஷ்யன் மட்டி, அல்லது மூடனா?

இதை எங்க அம்மாகிட்ட கேட்டிருந்தால் தலையில் ஒரு கொட்டு விழுந்திருக்கும், அதான் உங்ககிட்ட கேட்கிறேன்.

அடுத்த வேட்டை : வெள்ளை எலி – விரைவில்…

Tuesday, June 06, 2006

வேட்டையாடு விளையாடு – புட்டான்

சின்ன வயசு நடந்த சம்பவங்களை இப்போ நெனச்சி பார்த்தாலும் சந்தோசமாகத் தான் இருக்குது. அதை அப்போ அப்போ சிவாவின் பதிவுகள் படித்து அனுபவிச்சியிருக்கிறேன்.

கிராமம் என்றாலே அங்கே வெளையாட்டும் வேட்டையாடுதலும் இல்லாம இருக்காது.

என்னுடைய மொத வேட்டையாடுதல் எப்படி தொடங்கிச்சின்னா, புட்டான் (தும்பி) பிடிக்கிறதிலயும், கலர் கலர் ஈ பிடிக்கறதிலயும் தான்.

புட்டான் பிடிக்கும் கலையே தனிதான், செடியில் அமர்ந்திருக்கும் புட்டானை, சவுண்டே வுடாம நைசா பூனைக்கணக்கா கிட்ட போய், அதன் வாலை பிடிக்க வேண்டும், பிடித்தவுடன் உடனே அதன் ரக்கையை பிடிக்கணும், இல்லேன்னா வெட்டருவா புட்டான் கடிச்சிபுடும். நான் கடியும் வாங்கியிருக்கேன்.

புட்டான்கள் பலவகையுண்டு. சின்னதா இருப்பது கொசு புட்டான், அதை பிடிக்கிறது மகா கஷ்டம். அப்புறம் மஞ்ச நிறத்தில் இருக்கிறதுக்கு பேரு எங்க ஊரில் திருடன், ஊதா நிறத்தில் திருடன் சைசிலேயே இருக்கும் புட்டானுக்கு போலிஸ்காரன்னு பேரு, காரணம் ஊதா புட்டானை கண்டதும் மஞ்ச புட்டான் பறந்துடும். அப்புறம் டேஞ்சர் புட்டான் நம்ம வெட்டருவா தான்.

வெட்டருவா புட்டான் பச்சை நிறத்தில் போலிஸ் திருடனை விட கொஞ்சம் பெரிசா இருக்கும். மகா மோசமான புட்டான், அவன் கிட்ட போலிஸ், திருடன், கொசு இப்படி யாரு மாட்டினாலும் கடிச்சு துன்னுபுடுவான்.

அப்புறம் செல சமயம் நல்ல கலர் கலரா புட்டாங்கள் வரும், வந்துட்டா, யாரு நல்ல அழகான புட்டான் வச்சிருக்கானோ அவனுக்கு தனி மரியாதை, அந்த பயவுள்ள ராத்திரி அதை ஒரு அட்டை பெட்டியில் வைத்திருப்பான்,
காலையில் பார்த்தால் எறும்புங்க தின்னுட்டி இருக்கும்.

வைக்கப்டப்பு இருக்கிற இடத்துல செவப்பு நெறத்துல நிறைய புட்டாங்கள் பறக்கும், அதை நாங்க வெளக்குமாரு வைச்சி அடிச்சி புடிப்போம்.
நான் பயப்படுகிற புட்டானே, அந்த மல புட்டான் தான். அதை மலை புட்டான்னு சொல்லுறதா இல்லை மழை புட்டான்னு சொல்லுறதான்னு இன்னும் கொழப்பம் இருக்குது, சிவாகிட்ட தான் கேட்கணும்.

மழை பேஞ்சா ஒடனே வந்துடும், அய்யோ ராத்திரி லைட் மேலே மோதிகிட்டே இருக்கும், திடிரென்று ராக்கெட் வேகத்தில் கீழே பாயும், நான் பயந்து ஓடுவேன். செல சமயம், நம்ம மேலே, சட்டையில் இருக்கும், அதை தம்பி சொல்ல, அய்யோ, குய்யோன்னு சட்டையை கழட்டி போட்டு ஓடுவேன். அப்புறம் அம்மா வெளக்குமாத்தை கொடுக்க, வீராதி வீரன் என் தம்பி, தைரியமாக அதை அடித்து ஒரு கையால் பிடிச்சி வெளியே வீசிடுவான், அடுத்த நாள் எங்க வீட்டு எறும்புகளுக்கு பிரியாணி தான்.

செல சமயம், நம்ம கூட்டாளிங்க மழை புட்டானை பிடிச்சிட்டு வந்து அதன் வாலில் நூலை கட்டி விடுவான்க, அது அங்கேயும் இங்கேயும் ஓடும், செல பயலுக நூலை இழுக்க, வால் அறுந்துடும், அவனை போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவோம். செல சமயம் புட்டான் பறந்து வேப்ப மரத்து உச்சிக்கு போயிடும், நாங்களும் விட்டுட்டு அடுத்த் ஆட்டத்துக்கு போயிடுவோம்.

எங்க ஊரு கோயிலு கொடை வந்துட்டா போதும், கிடா வெட்டுவாங்க தானே. விழா முடிஞ்சதும், எங்க கூட்டாளிகள் எல்லாம் காட்டுக்குள்ள மண் கோயில் கட்டுவோம், மண் சட்டியில் பேப்பரை ஒட்டி, கொட்டு தயார் செய்வோம், பூவரசு எலையை எடுத்து பீப்பீ செய்வோம், ஆளுக்கு ஒரு இசைக்கருவி.
அப்புறம் சாமியாட ஒருவர், விபூதி, சாம்பிராணி, சாமி எல்லாம் தயார். அப்புறம் கிடாவுக்கு எங்கே போறது, இருக்கவே இருக்குது நம்ம புட்டான்கள்.
நாங்க புட்டான்களை புடிச்சிட்டு வந்து கொடுக்க, சாமியாடி ஆடிக்கொண்டே கிடா வெட்டுவார், நல்ல பனைமட்டை ஓரத்தில் இருக்கும் கருக்கை கத்தியாக்குவார், ஒரே வெட்டு, தல துண்டாயிடும், இப்படி 20, 30 கிடா வெட்டுவார்.

இதை ஒரு நாள் எங்க அம்மா கிட்ட யாரோ போட்டு கொடுக்க, எங்க வீட்டில் பெரிய பூசையே நடந்தது, அப்புறம் ராத்திரி ஒரு கதை சொன்னாங்க.
ஒரு முனிவராம், ரொம்ப ரொம்ப நல்லவராம், ஒரு முறை அவர் தவறே செய்யாமல் ஒரு அரசர் அவரை பிடிச்சி, மரத்தில் கட்டி வைத்து உடம்பு எல்லாம் ஈட்டியால் குத்தச் சொல்லி கொன்னுடுவார், முனிவரும் கொடுமைகள் எல்லாம் அனுபவிச்சு, செத்து சித்திரகுப்தனிடம் போவார், அங்கே போய் அவரிடம் சண்டை போடுவார், நான் ரொம்பவும் நல்லவன், எப்போவும் இறைவனையே வேண்டுபவன், எப்படி என்னை அந்த அரசன் கொடுமைப்படுத்தி கொன்றான், நான் என்ன பாவம் செய்தேன் என்று கேட்டாராம்.

அதுக்கு சித்திரகுப்தன் ரிஜிஸ்டரை எடுத்து தேதி வாரியாக சின்ன வயசில் நீர் புட்டான்களை பிடிச்சி கொன்னிருக்கீரு, அதான் உமக்கு இந்த தண்டனை என்றாராம்.

இதை சொல்லிட்டு அம்மா, அய்யா! அந்த முனிவருக்கே இந்த தண்டனை என்றால், உனக்கு எப்படி எல்லாம் தண்டனை கிடைக்கும், நினைச்சு பாரு, இனிமேல் அப்படி செய்யாதே, பாவமுண்ணு ஒரு அறிவுரையோடு கதையை முடிச்சாங்க, நானும் அத்தோடு புட்டான்களை கொல்லுறதை விட்டுட்டேன், ஆனா கருந்தேள் பிடிக்கத் தொடங்கிட்டேன். ஏன்னா, தேளை கொன்னா தண்டனைன்னு அம்மா கதை சொல்லலையே?

அது அடுத்த கதை, கருந்தேள், மஞ்ச தேளை எப்படி புடிப்போமுன்னு வெளாவாரியா அடுத்தவாட்டி சொல்றேன்.